திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் வெள்ள அனர்த்த முன்னாயத்த மாவட்ட குழுக்கூட்டமானது நேற்று (23) மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
வருடாந்தம் நவம்பர் மாதம் முதல் பெப்ரவரி மாதம் வரை இடம்பெறும் வடகிழக்கு பருவமழை காலத்தில் திருகோணமலை மாவட்டத்தில் குறிப்பிட்ட பிரதேசங்களில் வெள்ள நிலைமைகள் தொடர்ச்சியாக காணப்படுகின்றன. கூடுதலாக, தற்போது நிலவும் இரண்டாவது பருவமழை காலநிலையானது ஏற்கனவே திருகோணமலை மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க வெள்ள அபாயத்தை அதிகரித்துள்ளது.
இந்தப் பின்னணியில், மழைக்கால அனர்த்தங்களினால் பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்கு முன்னோட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து பிரதேச ரீதியாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுணதாஸ் அவர்களினால் கலந்துரையாடப்பட்டது.
இக்கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.சுதாகரன், மாவட்ட பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட அரச திணைக்கள பிரதானிகள், உள்ளூராட்சி மன்ற உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதானிகள் , முப்படையினர் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.