அமெரிக்க எரிபொருள் நிறுவனம் சேவையை ஆரம்பிக்கின்றது

அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆர் எம் பார்க் என்ற நிறுவனம் எதிர்வரும் மாதம் இலங்கையில் தனது எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களை இந்த நிறுவனம் எதிர்வரும் 20 வருடங்களுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இயங்கிவருகையில் தற்போது அமெரிக்காவும் அதில் இணைந்துள்ளது.

ஆரம்பத்தில் 150 நிலையங்கள் வழங்கப்பட்டாலும் பின்னர் அது தனக்கு சொந்தமாக 50 நிலையங்களை அமைப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் இந்த நிலையங்கள் இயங்கும். சீனாவின் சினோபக் நிறுவனம் கடந்த மாதத்தில் இருந்து இயங்க ஆரம்பித்தள்ளதுடன், இந்திய மற்றும் இலங்கை எரிபொருள் நிறுவனங்களின் விலையை விட 3 ரூபாய்கள் குறைவாக விற்பனை செய்து வருகின்றது.

இதனிடையே, அவுஸ்திரேலியாவின் யுனைட்டட் நிறுவனத்திற்கும் 150 எரிபொருள் நிலையங்கள் வழங்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.