ஆர்ப்பாட்டங்களுக்கு எதிரான கடும் நிலைப்பாட்டை நிறுத்துங்கள் – மன்னிப்பு சபை அறிக்கை

இலங்கையின் 76 சுதந்திரதினத்தன்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டவர்களிற்கு எதிராக பொலிஸார் சட்டவிரோத பலத்தை பயன்படுத்தியது குறித்தும் கடந்த சில வாரங்களாக நாட்டின் பல பாகங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிரான ஒடுக்குமுறை குறித்தும் கரிசனை கொண்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான பிரிவு தெரிவித்துள்ளது.

கிளிநொச்சியில் பொலிஸார் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக கண்ணீர்புகைப்பிரயோகத்தை மேற்கொண்டதுடன் நீர்த்தாரை புகைபிரயோகத்தையும் மேற்கொண்டனர். ஆர்ப்பாட்டக்காரர்களை வீதிகளில் இழுத்துச்சென்றனர். யாழ். பல்கலைகழக மாணவர்கள் சிலரை கைதுசெய்தனர் எனவும் தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை இலங்கை அதிகாரிகள் உடனடியாக ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிரான இந்த கடுமையான நடவடிக்கைகளை அச்சுறுத்தல்கள் மிரட்டல்கள் பழிவாங்கல்களை நிறுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அமைதியான ஆர்ப்பாட்டங்களிற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டிய அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமையை மக்கள் பயன்படுத்துவதற்கான சூழலை பாரபட்சமின்றி ஏற்படுத்தவேண்டிய கடப்பாடு இலங்கைக்கு சர்வதேச சட்டங்களின் கீழ் உள்ளது எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களில் சட்ட அமுலாக்கல் அதிகாரிகளின் அணுகுமுறை சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மற்றும் சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் ஆயுதங்கள் பலத்தை பயன்படுத்துவது குறித்த ஐநாவின் அடிப்படை கொள்கைகளின் அடிப்படையில் காணப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.