கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் சூழலில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று(24) இரவு 8 மணியளவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார். அதில் நாடு முழுவதிலும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.
கொரோனா வைரஸ் இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. கொரோனா பரவலை தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இருப்பினும் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் 500 பேரையும் தாண்டி விட்டது.
கடந்த ஞாயிறு நாட்டு மக்களால் ஒருநாள் மக்கள் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு வெற்றியளித்ததைத் தொடர்ந்து இந்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இன்று நள்ளிரவு 12 மணிக்கு நடைமுறைக்கு வரும் ஊரடங்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி வரை நடைமுறையிலிருக்கும். இந்த நடைமுறைக்கு ஒவ்வொரு இந்தியரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்த 21 நாட்களை மக்கள் ஆக்கபூர்வமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் மோடி தனது உரையில் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.