இராணுவத்திடம் சரணடைந்தோரின் குழந்தைகளுக்கு என்ன நடந்தது? மன்னிப்பு சபையின் செயலாளர் கேள்வி

போரின் இறுதியில் படையினரிடம் குடும்பமாக சரணடைந்தவர்களின் குழந்தைகள் எங்கே? அவர்களுக்கு என்ன நடந்தது எனக் கேள்வி எழுப்பியுள்ளார் சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர், “இலங்கையின் உள்நாட்டு போர் முடிவடைந்து 15 வருடங்கள் நிறைவடையும் காலத்தில் எனது பயணம் இடம் பெற்றுள்ளது. மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் அறிவதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன்.

“இலங்கையில் நீதியை நிலைநாட்ட நாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை அறிவதற்காகவும் போரால் பாதிக் கப்பட்ட வர்களுக்கு சர்வதேச மன்னிப்பு சபையின் ஆதரவை வழங்கவும் நான் இங்கு வந்துள்ளேன். “முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கேற்பதற்காக வடக்குக்கு நான் சென்றேன். அப்போது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்தித்தேன். அவர்கள் வெளிப்படுத்துகின்ற துணிச்சலும் – மீள்எழுச்சியும் – நீதியை காண்பதற்கான அவர்களின் உறுதிப்பாடும் எனது மனதை தொட்டுள்ளது.

“இலங்கை போரில் மிகப்பெருமளவானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு என்ன நடந்தது? காணாமல் ஆக்கப்படுதல் என்பது மிகமோசமான வன்முறை – அது முடிவுக்கு வராது – உங்களுக்கு தெரியாது, பாதிக்கப்பட்டவர்களுக்கு பல வருடங்களுக்கு இந்த வலி தொடரும் – மரணத்தைவிட இது வலிமிகுந்தது. வலியும் வேதனையும் மிக மோசமானதாகக் காணப்படும் உளவியல் சித்திரவதை. நாளாந் தம் – ஒவ்வொரு நாளும் – ஒவ்வொரு வாரமும் – தசாப்தங்களாக இந்த வலியும் வேதனையும் தொடரும். இது இலங்கைமீது விழுந்த கறை. இந்தக் கறையை அகற்ற ஒவ்வொரு இலங்கை பிரஜையும் முன்வரவேண்டும். அந்த குழந்தைகள் எங்கே? நான்கைந்து மாத குழந்தைகள் – மூன்று – நான்கு வயதானவர்கள். நான் அவர்களின் படங்களைப் பார்த்திருக்கின்றேன். 15 வருடங்களாகியும் பதில் இல்லை – இது மிக நீண்டகாலம். இது மன்னிக்க முடியாத குற்றம் – இவர்கள் குறித்து அரசாங்கம் பதிலளிக்கவேண்டும்.

இவர்கள் தாங்களாக முன்வந்து சரணடைந்தவர்கள். சரணடைவதற்கான பகுதிக்கு தாங்களாக சென்று சரணடைந்தார்கள். அவர்களின் குழந்தைகள் எங்கே – அவர்களுக்கு என்ன நடந்தது?” என்றும் கேட்டார்.