இறுதிப் போரின்போது அரசிடம் கையளிக்கப்பட்ட குழந்தைகள் எங்கே? கேள்வி எழுப்பிய சிறீதரன்

இறுதி யுத்தத்தின்போது அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்ட, குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் துணைவியார் ஷிரந்தி ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்ட குழந்தைகளுக்கு என்ன நடந்தது என சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் Agnes Callamard கேள்வியெழுப்பியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் உரையாற்றிக்கொண்டிருக்கும் மாணவி ஒருவரின் புகைப்படத்தில் படையினரிடம் கையளிக்கப்பட்ட தமிழ் குழந்தை ஒன்று இருப்பதாக அந்த குழந்தையின் பெற்றோர் கூறுகின்றனர். அது தொடர்பான புகைப்படத்தை இந்த உயரியச் சபையில் நானும் காண்பித்திருந்தேன். எனினும், அது குறித்து விசாரித்தபோது அப்படியொரு மாணவி இல்லையென கூறப்படுகின்றது. இந்த குழந்தைகளுக்கு என்ன நடந்தது.

இதனையே அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் Agens Callamardடும் கேட்டிருந்தார். 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அப்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, உள்ளக பொறிமுறை மூலம் ஒரு தீர்வை காணுகின்றோம் என தெரிவித்திருந்தார். அதற்காக வெளிநாட்டு நிபுணர்களிடம் இருந்து சட்ட ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை இந்த மண்ணில் அவ்வாறு நடக்கவில்லை” என்றும் சிறிதரன் சுட்டிக்காட்டினாா்.