இலங்கை – இந்திய உறவுக்கு தமிழகம் ஆபத்தானது

இலங்கை இந்திய நல்லுறவுக்கு தமிழகம் ஆபத்தானது என இந்திய மத்திய அரசு கருதியதால் தான் தமிழக முதல்வர் மு.க. ஸ்ராலினின் உரையை இலங்கையில் இடம்பெற்ற நாம்-200 என்ற நிகழ்வில் ஒலிபரப்ப இந்திய மத்திய அரசு அனுமதிக்கவில்லை என இந்திய பத்திரிகையான இந்து தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற மலையக மக்களின் இலங்கை வரவை குறிக்கும் 200 ஆவது ஆண்டு நிகழ்வான நாம்-200 என்ற நிகழ்வில் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மற்றும் பாரதிய ஜததா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை உடப்ட பலர் பங்கு பற்றியிருந்தனர்.

இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கு தமிழகத்தின் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு அழைப்பிதழை நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அமைச்சர் ஜீவன் தொன்டமான் அனுப்பியிருந்தார். அமைச்சர் கலந்து கொள்வதற்கான அனுமதியை தமிழக முதல்வர் வழங்கியபோதும், இறுதி நேரத்தில் அரசியல் அனுமதி என்ற காரணத்தை காட்டி இந்திய மத்திய அரசு அதனை தடுத்திருந்தது.

இந்தியாவுக்கும் – சீனாவுக்குமிடையில் உள்ள முரன்பாடுகளை பயன்படுத்தி தமது நலன்களை எட்டலாம் என ஒரு சில தமிழ் அமைப்புக்களும், தனிநபர்களும் செயற்பட்டுவருகையில், இந்திய மத்திய அரசுக்கும், தமிழகத்திற்கும் இடையிலான முரன்பாடுகள் அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.