சிறீலங்காவில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை பாரதிய ஜனதா கட்சி தொடர்பில் சீன மற்றும் பாகிஸ்தான் ஊடகங்கள் முக்கயத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டுள்ளன.
நேபாளம் மற்றும் சிறீலங்கா வரையிலும் பாரதிய ஜனதாக் கட்சி விரிவுபடுத்தப்படும் என இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் சா அவர்கள் தெரிவித்ததாக இந்தியாவின் திரிபுர மாநில முதல்வர் பிப்லாப் குமார் அண்மையில் தெரிவித்ததை தொடர்ந்து சிறீலங்காவில் கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவராக கொழும்பை தளமாகக் கொண்ட வேலுசாமி முத்துசுவாமியும், பொருளாளராக வர்த்தகர் வி. டிலானும், செயலாளராக ஊடகவியலாளராக எம் இந்திரஜித்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு அரசியல் சிந்தனையில் அல்லது தலையீடுகளுடன் சிறீலங்காவில் கட்சிகள் ஆரம்பிக்கப்படுவது இது புதியதல்ல. 1939 ஆம் ஆண்டு மலையகத்திற்கு பயணம் மேற்கொண்ட முன்னாள் இந்திய பிரதமர் ஜவர்கல்லால் நேரு அவர்கள் சிலோன் இந்திய காங்கிரஸ் என்ற கட்சியை ஆரம்பித்திருந்தார். அதுவே பின்னர் சிலோன் தொழிலாளர் கட்சியாக மாற்றம் பெற்றது.
ஐக்கிய பொதுவுடமைக் கட்சி மற்றும் லங்கா சமசமாஜக் கட்சி ஆகியவை முன்னர் சோவியத்தின் பொதுவுடமை கொள்கைகளை தழுவியதாக அமைக்கப்பட்ட கட்சிகளே.