உரிமைகளும் உறுதிப்பாடும் -துரைசாமி நடராஜா

மலையக சமூகத்தினர்  உரிமை மீறல்கள் பலவற்றுக்கும் உள்ளாகி வருகின்றனர்.கல்வி, தொழில், இருப்பிடம் எனப்பல்வேறு துறைகளும்  இதில் உள்ளடங்கும்.இவ்வுரிமை மீறல்கள் காரணமாக இச்சமூகத்தினர் தொடர்ந்தும் ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்து வருவதோடு தேசிய நீரோட்டக் கனவும் கானல் நீராகி வருகின்றது.இந்நிலையில் இம்மக்களின் சகலதுறை சார் உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட்டு தேசிய நீரோட்டக் கதவுகள் திறந்துவிடப்பட வேண்டியதன் அவசியத்தினை சமூக ஆர்வலர்கள் தொடர்ச்சியாகவே வலியுறுத்தி வருகின்றனர்.

‌ ‘ உரிமைகள் மனித வாழ்வின் நிபந்தனைகள்.பொதுவாக அவையின்றி எம்மனிதனும் சிறப்பாக செயற்பட முடியாது.இந்நோக்கங்களை அடைந்து கொள்வதற்காகவே இயங்கும் அரசு உரிமைகளை பேணுவதன் மூலம் மட்டுமே தனது இலக்கினை அடைந்துகொள்ள முடியும் ‘ என்கிறார் அறிஞர் லஸ்கி. ‘.உண்மையான உரிமைகள் சமூக பொதுநலத்தின் நிபந்தனைகள்’ என்பது  அறிஞர் ஹோபஸ்ஸின் கருத்தாகும்.எல்லா நிலைகளிலும் உரிமைகளின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.இந்த வகையில் சிவில் உரிமைகள், அரசியல் உரிமைகள், பொருளாதார உரிமைகள் என்றவாறு உரிமைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறாக ஏட்டளவில் உரிமைகள் இருந்தபோதும் அவற்றை அனுபவிக்க முடியாதவகையில் பல சமூகத்தினர் இருந்து வருவதும் தெரிந்த விடயமாகும்.அதிலும் பின்தங்கிய சமூகத்தினரிடையே உரிமை மீறல்கள் அதிகமாக இடம்பெற்று வருவதையும அறியக்கூடியதாக உள்ளது.இந்த வரிசையில் மலையக மக்களும் உள்ளீர்க்கபட  வேண்டியவர்களேயாவர்.

மலையக மக்களின் வரலாறு  இந்நாட்டில் 200 வருடங்களாகி இருக்கின்றது.இந்த 200 வருட காலமும் இவர்கள் கீழ்மட்ட வாழ்க்கை நிலைமைகளையே கொண்டிருப்பது வருந்தத்தக்க விடயமாகும்.இச்சமூகத்தினரைப் பொறுத்தவரையில் பல்வேறு உரிமை மீறல்கள் இடம்பெறுவதொன்றும் புதிய விடயமல்ல.இத்தகைய உரிமை மீறல்கள்  இச்சமூகம் ஒடுக்கப்படுவதற்கு வலுசேர்த்துள்ளது.கல்வியுரிமை என்பது ஏனைய உரிமைகளை அனுபவிப்பதற்கான முக்கிய உரிமையாக விளங்குகின்றது.

பொருளாதார சமூக வகுதிக்குள் கல்வியுரிமை உள்ளடக்குகின்றது.கல்வி உரிமையை உத்தரவாதப்படுத்துவதற்காக அரசு சட்ட நிர்வாக மற்றும் ஏனைய வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.மேலும் அனைத்து பிரஜைகளும் சமத்துவ அடிப்படையில் இவ்வுரிமையை அனுபவிப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் சமவாயம் உள்ளிட்ட பலவும் வலியுறுத்துகின்றன.எனினும் மலையக மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்கு குறுக்கீடாக பல்வேறு காரணிகள் காணப்படுகின்றன.

வறுமை, போஷாக்கின்மை, போக்குவரத்துச் சீர்கேடு, கஷ்ட மற்றும் அதிகஷ்ட பிரதேச நிலைமைகள், மனித மற்றும் பௌதீக வளப்பற்றாக்குறை போன்ற பலவும் இதில் உள்ளடங்குகின்றன.அரச வழிகாட்டி தத்துவக் கோட்பாடுகளில் அனைத்து மட்டங்களிலும் அனைவரும் சமத்துவ அடிப்படையில் கல்வியை அணுகுவதற்கான சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.எனினும் மலையகத்தைப் பொறுத்தவரையில் இக்கூற்று மறுக்கப்பட்ட ஒன்றாகவே இருந்து வருகின்றது.

மலையகத்தவர்களின் கல்வி நிலைமைகள் ஏனைய துறையினரைக் காட்டிலும் வீழ்ச்சிப் போக்கினையே வெளிப்படுத்தி வருகின்றன.2012/13 தகவலின்படி பெருந்தோட்ட பகுதிகளில் பாடசாலைக்கு செல்லாதோர் 12.2 வீதமாகவும், 5 ம் தரம் வரை கல்வி கற்றோர் 42 வீதமாகவும் 6 – 10 ம் தரம் வரை கல்வி கற்றோர் 38.07 வீதமாகவும, க.பொ.த. சாதாரண தரம் வரை கல்வி கற்றோர் 4.09 வீதமாகவும, க.பொ.த. உயர்தரம் வரை கல்வி கற்றோர் 2.2 வீதமாகவும் காணப்பட்டனர். பெருந்தோட்டப் பகுதிகளில் பாடசாலைக்கு செல்லாதோர் நகரம், கிராமத்தைக் காட்டிலும் 4 – 6 மடங்கு அதிகமாகும்.இக்கல்விப் பின்னடைவுகளை சீர்செய்வதில் அரசாங்கத்தின் வகிபாகம் எந்தளவுக்கு கை கொடுத்துள்ளது என்பது  கேள்விக்குறியாகும்.

தொழில் உரிமையானது ஒருவர் விரும்பிய தொழிலை தேர்ந்தெடுத்தலை பிரதான விடயமாக ஏற்றுக்கொண்டுள்ளது.இலங்கை அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் (உறுப்புரை 14) இவ்வுரிமை அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.தொழிற்பாதுகாப்பு, நியாயமான சம்பளம், பாதுகாப்பானதும் தூய்மையானதுமான தொழில் சுற்றாடல் என்பவற்றுடன் தொழிலுரிமை தொடர்புபடுவதாக புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.எனினும்  மலையக தொழிலாளர்களின் தொழிலுரிமைகள் பல சந்தர்ப்பங்களில் கம்பனியினராலும், தோட்ட நிர்வாகத்தினாலும் மீறப்பட்டு வருகின்றன.

உழைப்பிற்கேற்ற ஊதியமென்பது கானல் நீராகியுள்ள நிலையில் தொழிலாளர்களின் உழைப்பு உறிஞ்சப்பட்டு அவர்கள் கசக்கிப் பிழியப்படுவதும் புதிய விடயமல்ல. இதேவேளை மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாக செல்லும் மலையகப் பெண்கள் பலர் தொழில்  உரிமைகள் மீறப்பட்ட நிலையில் துன்ப துயரங்களை சந்தித்து வருகின்றனர்.இவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் அதிகரித்துள்ள நிலையில் பலர்   உச்சகட்ட  நெருக்கீடுகளால் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளமையும் தெரிந்ததேயாகும்.எனவே நாட்டிற்கு தேசிய வருவாயை அதிகளவில் ஈட்டித்தரும் இவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் இடம்பெறுதல் வேண்டும்.

 பெயரளவில் தொழில் சட்டங்கள்

இலங்கையில் தொழிற்சட்டங்கள் பல நடைமுறையில் உள்ளன.தோட்டத்தொழிலுக்கு இந்தியாவிலிருந்து அதிகளவான தொழிலாளர்கள் கொண்டு வரப்பட்டார்கள். இவ்வாறாக இந்தியாவிலிருந்து தொழிலாளர்களை கொண்டு வருவதற்கும் அவர்களுடைய நலன்களின் பொருட்டும் ஆட்சியாளர்களினால் பல்வேறு கட்டளைச் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.இதனடிப்படையில் 1841 இல் 5 ம் இலக்கமுடைய ‘ கூலி மற்றும் சேவைகள் ஒப்பந்த கட்டளைச் சட்டம் ‘ முதலாவதாக உருவாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு சட்டங்கள் தொழிலாளர்களின் நலன்கருதி உருவாக்கப்பட்டபோதும் இவற்றின் செயற்படுநிலை அல்லது நடைமுறைப் பயன்பாடுகள் திருப்திகரமானதாக இல்லை.இதனிடையே 2048 ஆகும் போது நாட்டை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றியமைக்க முடியுமான வகையில் தொழில் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தற்போதுள்ள தொழில்சட்டம் காலம் கடந்த சட்டமாகும்.இச்சட்டத்தின் ஊடாக தொழிலாளர்கள், முதலீட்டாளர்களுக்கு நலனோம்புகளை மேற்கொள்ள முடியாமல் இருப்பதுடன் நவீன காலத்துக்கு ஏற்ற வகையில் தொழில் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாமலுமுள்ளது.மேலும் தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல், தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாத்தல், நாட்டை அபிவிருத்தி செய்ய முடியுமான வகையில் தொழிற்சாலைகளை ஏற்படுத்தல் போன்ற அனைத்து துறைகளும் உள்ளடங்கும் வகையில் தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.டிஜிட்டல் உலகிற்கு பொருத்தமான தொழிலாளர்களை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். தொழில் சட்டத் திருத்தம் உலகத் தொழிலாளர் அமைப்பு ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலேயே மேற்கொள்ளப்படும்.அதனால் அதற்காக பொதுமக்களிடம் கருத்துக்களைப் பெற்றுக் கொள்ள தீர்மானித்துள்ளதாகவும்  அரசாங்கம் தெரிவித்துள்ளது.

‘ஒவ்வொருவரும் உணவு, அடிப்படை வசதி, மருத்துவ கவனிப்பு, அவசியமான சமூக வேலைகள் உட்பட தமதும், தமது குடும்பத்தினரதும் உடல் நலத்துக்கும் நல்வாழ்வுக்கும், போதுமான வாழ்க்கைத் தரத்திற்கும் உரிமையுடையவராவர். அத்துடன் வேலையின்மை, இயலாமை, கைம்மை, முதுமை காரணமாகவும் அவை போன்ற அவரது கட்டுப்பாட்டுக்கும் அப்பாற்பட்ட பிற சூழ்நிலை காரணமாகவும் வாழ்க்கைக்கு வழியில்லாமை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்பிற்கும் உரித்துடையவராவர் ‘ என்று ஒரு மனிதனின் வீட்டுரிமை குறித்து சர்வதேச மனிதவுரிமை சாசனம் வலியுறுத்துகின்றது.

இலங்கை அரசியலமைப்பின் கீழ் வீட்டுக்கான உரிமை அரச வழிகாட்டி தத்துவக் கோட்பாடுகளிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அரசு இலங்கை பிரஜைகளில் வீடற்றோருக்கு நியாயமான வசதிகளுடன் கூடிய வீடுகளை அமைத்துக் கொடுக்கும் கடப்பாட்டினைக் கொண்டுள்ளதையும் கூறியாக வேண்டும்.எனினும் பெருந்தோட்டப்புற மக்கள் இன்னும் லயத்து வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் தனிவீட்டுக் கலாசாரம் ஆமை வேகத்தில் இடம்பெற்று வருகின்றது.’ யானைப்பசிக்கு சோளப்பொறி ‘ என்றவாறு நிலைமைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன.அரசாங்கம் கிராமப்புற மக்களை மையப்படுத்தி வீடமைப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தியதே தவிர பெருந்தோட்ட தொழிலாளர்களை மையப்படுத்தியதாக நடவடிக்கைகள் அமையவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.வீடமைப்பு தொடர்பில் வெறும் வாக்குறுதிகளால் மலையக மக்களை திருப்திப்படுத்த முனைந்த அரசாங்கம் நடைமுறையில் உருப்படியாக எதனையும் செய்ததாக இல்லை.

அடிப்படை தேவைகளுள் ஒன்றாக உறையுள் அல்லது வீடு காணப்பட்டபோதும் பெருந்தோட்ட தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் அது இன்னும் எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றது. லயன் வீடுகளை அமைக்கக்கூடாதென அரசாங்கம் ஏற்கனவே சட்டமியற்றியுள்ளது.தனித்தனி அல்லது இரட்டை வீடுகளை ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஏற்ற முறையில் அமைக்குமிடத்து நிர்வாகம் பின்வரும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க  வேண்டியேற்படும் என்று கருதியது.இதற்கேற்ப வீட்டு வசதிக்காக பெரும் முதலீடு ஒதுக்கப்பட வேண்டும்.தொழிலாளர்கள் மீதான மத்தியபடுத்தப்பட்ட கட்டுப்பாடு தளர்ந்துவிட நேரிடும் போன்ற அச்சங்கள் நிர்வாகத்திடம் காணப்பட்டன.இதனால் தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கான வீட்டு வசதிகளை அபிவிருத்தி செய்வதில் உரிய அக்கறையை வெளிப்படுத்தவில்லை. .

1971 ம் ஆண்டு இடம்பெற்ற சமூக பொருளாதார அளவீட்டின்படி 85 சதவீதமான பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வாழ்ந்த வீடுகளில் 89 வீதமானவை லயன் வீடுகளே என்று தெரியவருகின்றது.இதேவேளை தோட்ட மக்கள் தொகையில் 50 வீதத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஒரு அறை மாத்திரம் கொண்ட வீடுகளிலேயே வாழ்ந்தனர்.

1971 இல் இரண்டு  அறைகளைக் கொண்ட வீடுகளில் 33.3 வீதமான குடும்பங்களும், 1981/82 இல் 45.4 வீதமான குடும்பங்களும் வாழ்ந்தனர்.1971 இல் மூன்று அறைகளைக் கொண்ட வீடுகளில் 11.8 வீதமான குடும்பங்கள் வாழ்ந்தன.1971 – 1981 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பெருந்தோட்ட வீடுகளில் 8.1 வீதமானவை அழிவிற்குள்ளாகின.2009 ம் ஆண்டு தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் கணிப்பின்படி இரண்டு இலட்சம் லயன் வீடுகளில் பெரும்பகுதி 150 வருட பழைமை வாய்ந்தவை என்று தெரியவருகின்றது.எனவே ஆட்சியாளர்கள் பெருந்தோட்ட மக்களின் வீட்டுரிமைக் கனவைமழுங்கடித்து அவர்களை நிர்க்கதி நிலைக்கு ஆளாக்கியுள்ளனர்.

இதைப்போன்றே சிறுவர் மற்றும் பெண்களின் உரிமைகளுக்கும் மலையகத்தில் ஆப்பு வைக்கப்பட்டுள்ளது.இந்நிலை தொடருமானால் மலையக சமூகம் எதிர்காலத்தில் பல்வேறு சிக்கல்களுக்கும் முகம் கொடுக்க வேண்டிய   அபாயநிலை மேலோங்கும் என்பதனை மறுப்பதற்கில்லை.இதனிடையே தோட்டத் தொழிலாளர்களுக்கான  பல்வேறு உரிமைகளையும் அரசாங்கம் உறுதிப்படுத்தப்போவதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன உறுதியளித்துள்ளார்.அரசாங்கத்தின் இந்த வாக்குறுதி ஏட்டளவில் முற்றுப்பெற்றுவிடாது செயல்வடிவம் பெறவேண்டும் என்பதே சகலரினதும் எதிர்பார்ப்பாகும்.