எனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது – சபாநாயகருக்கு சிறீதரன் கடிதம்

தனது வீட்டையும் அதனைச் சூழவுள்ள பகுதியைச் சுற்றிலும் மோட்டார் சைக்கிள்களில் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று இரவு வேளையில் பயணிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் சபாநாயகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இவர்கள் முகத்தையும் தலையையும் ஆடைகளால் மறைத்துக்கொண்டும், தலைக்கவசம் அணிந்துகொண்டும், மோட்டார் சைக்கிள்களில் பயணிக்கும் சிசிடிவி கமரா காட்சிகள் தன்னிடம் இருப்பதாகவும் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து காவல்துறையில் முறைப்பாடு செய்வதில் எந்தப் பயனும் இல்லை என்றும், முன்னர் இவ்வாறு முறைப்பாடு செய்த பின்னர், 200 பாதுகாப்புப் படையினர் ஒரே நேரத்தில் தனது வீட்டை முற்றுகையிட்டு வீட்டைச் சோதனையிட்டதை நாடாளுமன்ற உறுப்பினர் விவரித்தார்.

இதனை தாம் காவல்துறையிடம் அறிவிக்காவிட்டாலும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், பாதுகாப்பின்மை இருப்பதாகவும் தெரிவித்து சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியதாக சிறீதரன் மேலும் குறிப்பிட்டார்.