“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எமது கட்சியின் உறுப்பினரல்ல. எமது கட்சியில் போட்டியிடுவதா இல்லையா என்பதை அவர் முதலில் தீர்மானிக்க வேண்டும். பஸில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் அரசியல் கூட்டணி தொடர்பில் பேச்சில் ஈடுபடுவோம்” என்று சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ஷ கூறினார்.
பெரமுன கட்சியின் உறுப்பினர்களை அவர் பத்தரமுல்லையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று சந்தித்துப் பேசினார். இதன்பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில் அப்படியே வருமாறு,
கேள்வி – முக்கிய விடயங்கள் ஏதும் பேசப்பட்டதா ?
பதில் – எந்நாளும் விசேட பேச்சுகள்தான்
கேள்வி – பேச்சில் எவ்விடயங்கள் பற்றி பேசினீர்கள்?
பதில் – அரசியல் தரப்பினர் எதிர்கொண்டுள்ள பிரச்னைகள், எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்களை எதிர்க்கொள்வது உள்ளிட்ட பல விடயங்கள் பற்றி பேசினோம்.கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷ இன்னும் இரு வாரங்களில் நாட்டுக்கு வருவார். அதன் பின்னர் அரசியல் கூட்டணி பற்றி கலந்துரையாடுவோம்.
கேள்வி – ரணில் விக்கிரமசிங்க, நாமல் ராஜபக்ஷ, பஸில் ராஜபக்ஷ ஆகியோரில் யார் சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ?
பதில் – யாரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்பதை கட்சியின் நிறைவேற்று சபையே தீர்மானிக்கும். ரணில் விக்கிரமசிங்க எமது கட்சியின் உறுப்பினரல்ல, எமது கட்சியில் போட்டியிடுவதா இல்லையா என்பதை அவர் முதலில் தீர்மானிக்கவேண்டும்.
கேள்வி – உங்களை போன்று நாமல் ராஜபக்ஷவும் தற்போது விகாரைகளுக்கு செல்கிறார் ?
பதில் – தந்தை சென்ற பாதையில்தான் மகனும் செல்ல வேண்டும். அவர் பௌத்தர் ஆகவே விகாரைகளுக்கு செல்கிறார்.
கேள்வி – சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரவுள்ளனரே?
பதில் -சபாநாயகரை நாங்கள் பாதுகாப்போம். நம்பிக்கையில்லா பிரேரணையை நிச்சயம் தோற்கடிப்போம்.