எல்லை தாண்டி மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் – இராமேஸ்வரம் மீனவா்களுக்கு எச்சரிக்கை

13 எல்லை தாண்டி மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் - இராமேஸ்வரம் மீனவா்களுக்கு எச்சரிக்கைஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த ஒரு வாரத்தில் 30-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வருவதன் எதிரொலியாக, இராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையை தாண்டி செல்ல வேண்டாம் எனவும், உயிர்காக்கும் உபகரணங்களை கையில் வைத்துக் கொள்ளுமாறு இராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த சனிக்கிழமை மீன் பிடிக்க சென்ற மூன்று விசைப் படகுகளையும் அதிலிருந்து 22 மீனவர்களையும் எல்லை தாண்டி பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

அதனை தொடர்ந்து நேற்று 10 நாகை மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்துள்ளனர்.

தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கை கடற்படை கைது செய்து வருவதால் மீனவர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை மீன் பிடிக்க சென்ற 22 இராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்ததை கண்டித்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, இன்று வேலை நிறுத்தப் போராட்டம் முடிந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற இராமேஸ்வரம் மீனவர்களுக்கு இராமேஸ்வரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அப்துல் காதர் ஜெய்லானி உத்தரவின் பேரில் மீன்வளத் துறை அதிகாரிகள் ஒலிபெருக்கி வாயிலாக “இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடிக்க செல்லக்கூடாது, உயிர் காக்கும் உபகரணங்களை வைத்திருக்க வேண்டும், மீனவர் அடையாள அட்டை மற்றும் மீன்பிடி படகின் உரிய ஆவணங்களை வைத்துக் கொள்ளுமாறு” எச்சரிக்கை விடுத்துள்ளனர்.