ஒற்றையாட்சியை ஒழிக்கத் தயாரா? ரணிலிடம் கஜேந்திரன் எம்பி கேள்வி

kajan ranil ஒற்றையாட்சியை ஒழிக்கத் தயாரா? ரணிலிடம் கஜேந்திரன் எம்பி கேள்விஒற்றையாட்சியை ஒழித்து சமஸ்டி அரசியல் யாப்பினைக் கொண்டுவருவதற்கு ஜனாதிபதி ரணில் தயாரா கஜேந்திரன் எம்பியின் கேள்விக்கு பதிலளிக்காமல் நழுவிச் சென்றார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்திற்கு வருகைதந்து உரையாற்றியிருந்தார். ஊரையின் பின்னர் எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களது கேள்விகளுக்கும் கருத்துக்களக்கும் சபாநாயகர் சந்தற்பம் வழங்கியிருந்தார்.

அதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் எழுந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கேள்வி ஒன்றினை எழுப்பியிருந்தார்.

“ஜனாதிபதி இன்று நாடாளுமன்றத்திற்கு வருகைதந்து கருத்துரைத்து அமர்திருக்கின்றார். இன்றைய காலகட்டத்தில் இந்த நாட்டை பொருளாதார அழிவிலிருந்து மீட்டெடுப்பதற்காக பல முயற்சிகளை அவர் செய்து கொண்டுவருவதாக தொடர்ச்சியாகக் கூறிவருகின்ற நிலையில், இந்த நாட்டினை பொருளாதார அழிவிலிருந்து மீட்டெடுப்பதற்குச் செய்யப்பட வேண்டிய மிகப் பிரதானமான கடமையொன்று இருக்கின்றது என்பதனை ஜனாதிபதியின் மேலான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.

கடந்த 75 வருடங்களாக இலங்கையில் இனங்களுக்கு இடையில் உறவைச் சீர்குலைத்து துருவமயப்படுத்தியிருக்கின்ற ஒற்றையாட்சி அரசியல் யாப்பு, இ;ந்த நாட்டின் பொருளாதாரத்தை வங்குரோத்து நிலைக்குள் தள்ளியது இந்த ஒற்றையாட்சி அரசியல் யாப்பு, இந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் உட்பட சகல நீதிமன்றங்களையும் முடமாக்கியிருக்கின்ற ஒற்றையாட்சி அரசியலமைப்பு ஒழிக்கப்பட்டு தமிழ்த் தேசமும் சிங்கள தேசமும் சமத்துவமாக இந்தநாட்டின் முன்னேற்றத்தில் பங்கெடுக்கக்கூடிய ஓர் சமஸ்டி அரசியலமைப்பு கொண்டுவரப்படுவதன் மூலம் மட்டுமே அந்த முன்னேற்றத்தை நிரந்தரமாக ஏற்படுத்த முடியும்.

ஒற்றையாட்சியை ஒழித்து சமஸ்டி அரசியல் யாப்பினைக் கொண்டுவருவதற்கு ஜனாதிபதி தனது காலத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த நாட்டின் தோல்விக்கு இந்த ஒற்றையாட்சி அரசியல் யாப்புத்தான் காரணம் என்பதனை ஏற்றுக் கொண்டு தமிழ்த் தேசமும் சிங்கள தேசமும் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான ஓர் சமஸ்டி அரசியலமைப்பினைக் கொண்டுவருவதற்கும் அதன் மூலம் தமிழ் மக்கள் இந்த நாட்டினுடைய அபிவிருத்தியிலும் இந்த நாட்டினுடைய முன்னேற்றத்திலும் பங்கெடுத்து உலக வல்லரசுத்தரத்திற்கு இந்த நாட்டைக் கொண்டுவருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்த சமஸ்டி அரசியல் யாப்பினைக் கொண்டுவர சனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறான ஒரு சமஸ்டி அரசியல் யாப்பினைக் கொண்டுவருவதற்கு அவர் தயாராக இருக்கின்றாரா? என்று கஜேந்திரன் கேள்வி எழுப்பினாா்.

அவரது கேள்விக்கு எந்தப் பதிலையும் வழங்காது நழுவிச் சென்றார் ஜனாதிபதி.