கடன் மறுசீரமைப்பு தொடா்பான உடன்படிக்கை நாளை கைச்சாத்து – அமைச்சரவைக்குத் தெரிவித்த ஜனாதிபதி

இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான உடன்படிக்கை நாளை கைச்சாத்திடப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன இது தொடர்பில் இன்று விளக்கமளித்தார்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் விரிவான விளக்கம் ஜனாதிபதியினால் நேற்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டதாகவும் அது தொடர்பான உடன்படிக்கையில் நாளை கைச்சாத்திடுவதற்காக பாரிஸ் கழகத்தின் (PARIS CLUB) அதிகாரிகளை சந்திப்பதற்காக நிதி அமைச்சின் செயலாளர், மற்றும் திறைசேரியின் பிரதானி இராஜாங்க அமைச்சர்கள் உள்ளிட்ட இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.

கைச்சாத்திடப்படவுள்ள உடன்படிக்கைகள் தொடர்பில் அனைத்து விடயங்களையும் இலங்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் அது தொடர்பில் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி நாளை உரை நிகழ்த்தவுள்ளதாகவும் பந்துல குணவர்தன தெரிவித்தார்.