கடற்படையினருக்கும் இந்திய மீனவருக்கும் இடையில் நெடுந்தீவு கடற்பரப்பில் மோதல் – கடற்படை வீரா் ஒருவா் பலி

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை பிடிக்கச் சென்ற கடற்படை வீரர் ஒருவர் இந்திய மீனவர்களின் தாக்குதலில் உயிரிழந்தார். ரத்நாயக்க என்ற இலங்கை கடற்படை வீரரே இவ்வாறு உயிரிழந்தார். இதன்போது 10 இந்திய மீனவர்களும் ஒரு படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய இழுவைமடிப் படகை பிடிக்க காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து கடற்படையினர் சென்றிருந்தனர்.

இந்தியப் மீனவர்களின் படகை கைப்பற்ற முனைந்தபோது இந்திய மீனவர்களுக்கும் கடற்படைக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் இதன்போது உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 10 பேரும், மீனவர்கள் வந்த படகும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். உயிரிழந்த கடற்படை வீரரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பிரதே பரிசோதனையின் பின்னர் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும். சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.