கட்டாய தகன விவகாரம்: பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு இழப்பீடு வழங்க சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

கோவிட் தொற்றுநோய் நிலவிய காலப்பகுதியில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட கட்டாய தகன விவ்காரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மேலும் தகனமா அடக்கமா என்ற விவகாரத்தில், மன்னிப்புக் கேட்டு பிரச்சினையில் இருந்து தப்பி ஓட முயற்சிக்க வேண்டாம்  சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

‘கோவிட் தொற்றுநோய் நிலவிய காலப்பகுதியில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட கட்டாய தகன கொள்கைக்கு மன்னிப்பு கேட்பதென்பது ஒரு சிறந்த விடயம். இந்த தீர்மானத்திற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் ஆதரவளித்தனர். இதன் மூலம் முஸ்லிம் மக்களின் சமய, கலாசார உரிமைகள் முற்றாக மீறப்பட்டன’ என்றும் நாட்டில் இனவாதமும் மதவாதமும் முன்னெடுக்கப்பட்டன எனவும்  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களை இலக்கு வைத்து அடக்கமா தகனமா என்ற விவகாரம் தொடர்பில் கோட்டாபய ராஜபக்சவின் அமைச்சரவை தவறான தீர்மானத்தை எடுத்தது. இந்த தீர்மானம் எந்த நபரின் அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது? இது தொடர்பாக ஆலோசனை வழங்கியது யார்? இந்த ஆலோசனை தொடர்பாக அரசியல் தலைமைகள் பரிசீலித்து ஆராய்ந்து பார்க்காததன் காரணம் என்ன? போன்ற விடயங்கள் தொடர்பான காரணங்களை முன்வைக்க வேண்டும் என சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.