காத்தான்குடியில் கைதான 30 பேரும் பிணையில் விடுதலை – 26 ஆம் திகதி ஆஜராகுமாறு உத்தரவு

காத்தான்குடியில் சட்டவிரோதமாக ஒன்று கூடிய சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 30 பேரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் நேற்று மாலை ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை சரீரப்பிணையில் செல்ல அனுமதித்ததுடன் எதிர்வரும் 26 ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

காத்தான்குடி பாலமுனை பகுதியில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக கூட்டம் நடத்திய குற்றச்சாட்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுத்துள்ள சஹ்ரான் காசிமின் சகோதரியின் கணவர் உட்பட 30 பேரை சந்தேகத்தின் பேரில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

23 மோட்டார்சைக்கிள் முச்சக்கர வண்டி ஒன்றும் இதன்போது மீட்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளுக்கு பொலிஸார் சென்று விசேட சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதையடுத்து பிரதேசத்தில் பெரும் பரபரப்பு எற்பட்டுள்ளது.

இதில் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் இவர்களை மாலையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை சரீரப்பிணையில் செல்ல அனுமதித்ததுடன் எதிர்வரும் 26 ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு பிணையில் விடுவித்தார்.