காவல் துறை அதிகாரங்களை படையினருக்கு வழங்கிய புதிய அரசாங்கத்தின் செயற்பாடானது சனநாயகத்தை முடக்கும் ஒரு நடவடிக்கையாகவே கொள்ளவேண்டியுள்ளது. என முன்னிலை சோஷலிச கட்சியின் ஏற்பாட்டாளர் துமிந்த நாகமுவ குறிப்பிட்டுள்ளார்.பொலிஸாருடைய அதிகாரத்தை இராணுவத்தினருக்கு வழங்கும் அளவுக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினை என்ன எனவும் கேள்வி எழுப்பினார்
முன்னிலை சோஷலிச கட்சியின் தலைமையகத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் கூறியதாவது,
வெளிநாடொன்றின் தூதரக பணியாளர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ளமை புதிய அரசாங்கத்தின் கீழ் ஜனநாயகத்திற்கு இருக்கும் இடத்தை கண்டுகொள்ள போதுமானது
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்தோர் நாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுகின்றது. ஆகவே, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியமானதாகும். அதற்காக சிங்கள மக்கள் எமக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தனர். தற்போது புதிய ஜனாதிபதியாக கோத்தாபய தெரிவு செய்யப்பட்டுள்ளார். எது எவ்வாறிருப்பினும் எதிர்வரும் பொதுத்தேர்தலை மையமாக கொண்டே அவர்கள் தற்போது தமது நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்கின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை புதிய அரசாங்கத்தின் முதல் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. அதனூடாக பொலிஸாரின் அதிகாரத்தை இராணுவத்தினருக்கு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் பிரகாரம் ஏதேனும் அவசர பாதுகாப்பு நெருக்கடியான நிலைமையிலேயே பொலிஸாருடைய அதிகாரம் இராணுவத்தினருக்கு வழங்கப்படும். ஆயினும் இப்பொழுது அவ்வாறான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது எனின் அவசர கால நிலைமை ஏதேனும் உண்டா?
பொலிஸாருடைய அதிகாரம் இராணுவத்தினருக்கு வழங்குவதில் என்ன பிரச்சினை ஏற்படப் போகின்றது என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களை அடுத்து பொலிஸாருடைய அதிகாரம் இராணுவத்தினருக்கும் வழங்கப்பட்டது. அதன் போது என்ன நேர்ந்தது? முன்னதாக இராணுவத்தில் சேவையாற்றிய காலி பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவியின் தந்தையொருவர் அவருடைய பிள்ளையை அழைத்து செல்ல வந்த பொழுது அங்கு இருந்த இராணுவ உத்தியோகத்தருடன் கருத்து முரண்பாடு ஏற்பட்டது. இதன் போது அந்த இராணுவ வீரர் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்தார்.
அரச மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் முன்னிலையாவதற்கே பொலிஸார் உள்ளனர். அதேபோல் இரு நாடுகளுக்கிடையில் இடம் பெறும் பிரச்சினைகள் தொடர்பில் முன்னிலையாவதற்கே இராணுவத்தினர் உள்ளனர். இந்நிலையில் பொலிஸாரின் அதிகாரத்தை இராணுவத்தினருக்கு வழங்குவதால் வடக்கு, தெற்கு என அனைத்து பகுதியிலும் உள்ள மக்களுக்கும் பாதகமான விளைவுகளே ஏற்படும். வெளிநாட்டு முதலீடுகள் இன்றி அரசாங்கத்தை கொண்டு நடத்த முடியாது. எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பின்னர் எம்.சி.சி உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக அமெரிக்க தூதுவர் காத்துக் கொண்டுள்ளார். சீனா, இந்தியா போன்ற நாடுகள் நாட்டின் பொருளாதாரத்தை கொள்ளையடிப்பதற்கு காத்திருக்கின்றன.
இதற்கு அரசாங்கம் உடன்படும் பட்சத்தில் மக்கள் அவர்களின் எதிர்ப்பை வெளிபடுத்துவர். அதனை ஒடுக்குவதற்கு ஏதுவாகவே இராணுத்தினருக்கு பொலிஸாரின் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தை முடக்கும் வகையில் புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. ஆகவே, அதனை கருத்தில் கொண்டு, இந்நிலை வலுவடைவதை தடுக்க அனைத்து தொழிலாளர் வர்க்கத்தினரும் ஒன்றிணைய வேண்டும்.
Share