குருந்தூர்மலை, வெடுக்குநாறிமலை ஆலயங்களில் சைவ மக்கள் சுதந்திரமாக வழிபாடுகள் செய்யலாம் – அமைச்சர் விதுர உறுதி

4 குருந்தூர்மலை, வெடுக்குநாறிமலை ஆலயங்களில் சைவ மக்கள் சுதந்திரமாக வழிபாடுகள் செய்யலாம் - அமைச்சர் விதுர உறுதிகுருந்தூர்மலை மற்றும் வெடுக்குநாறிமலை சிவன் ஆலயங்களில் சைவ மக்கள் சுதந்திரமாக வழிபாடுகள் செய்யலாம் என்று புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, இந்து அமைப்புக்களின் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, இந்து மதத் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

நல்லை ஆதீன குரு முதல்வர் தலைமையில் நல்லை ஆதீனத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் இந்து மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டன என்று சிவபூமி அறக்கட்டளை அமைப்பாளர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பு தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

குருந்தூர்மலை மற்றும் வெடுக்கு நாறிமலை சிவன் ஆலயங்களில் சைவ மக்கள் சுதந்திரமாக வழிபாடு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என அமைச்சரிடம் வேண்டுகோள் விடப்பட்டது. மேலும், திருக்கோணேஸ்வரம் ஆலயம் அருகே உள்ள பாதையின் இருமருங்கிலும் அமைக்கப்பட்டு இருக்கின்ற பெட்டிக் கடைகளை அப்புறப்படுத்தி புனிதத் தலத்தின் மேன்மையைப் பேண வழி செய்ய வேண்டும் என்றும் அவரிடம் எடுத்துரைக்கப்பட்டது.

யாழ். காங்கேசன்துறை – தல்செவன ஹோட்டல் அமைந்துள்ள இடம் சைவ மக்களின் ஆச்சிரமம் இருந்த இடம் எனவும், அது இதுவரை விடுவிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியதுடன் அதனை உடன் வழங்க ஏற்பாடு செய்யுமாறும் அமைச்சரிடம் கோரிக்கை விடப்பட்டது.

இவ்வாறு நாம் விடுத்த கோரிக்கைகளுக்குப் பதில் கூறிய அமைச்சர், குருந்தூர்மலை, வெடுக்குநாறிமலைப் பகுதிகளில் சைவ மக்கள் உள்ளிட்ட சகல மதத்தவர்களும் சுதந்திரமாக வழிபாடு செய்யலாம் என்றும், அந்தப் பகுதிகள் தொல்லியல் திணைகளத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன என்றும் தெரிவித்தார். மேலும், திருக்கோணேஸ்வர ஆலய வீதியில் பெட்டிக்கடை அகற்றுவது தொடர்பாக மாற்று ஏற்பாடு விரைவில் செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். காங்கேசன்துறை தல்செவன ஹோட்டல் காணி விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

இந்தச் சந்திப்பில் நல்லை ஆதீன குரு முதல்வர் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள், இந்து கலாசார திணக்களத்தின் பணிப்பாளர் அநுருத்தன், சிவபூமி அறக்கட்டளை
அமைப்பாளர் கலாநிதி ஆறு. திருமுருகன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனா்.