குழந்தைகள் மீதான படுகொலைகளுக்கு மஜக சிறப்பு நிர்வாகக் குழுவில் கடும் கண்டனம்

மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் காணொளி வழியே பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் நடைப்பெற்றது.
இதில் இணைப்பொதுச்செயலாளர் J.S. ரிஃபாயி அவர்கள் வரவேற்புரையாற்றி கூட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார்.
அதன் பிறகு நிர்வாகிகளின் கலந்துரையாடல் தொடங்கியது.
சமீப காலமாக நடைபெற்று வரும்  கட்சியின் எழுச்சி மிகு போராட்டங்கள், புதிதாக இணைபவர்களின் வருகை, அடுத்தக்கட்ட வளர்ச்சிப் பணிகள் ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டது.
ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலை விவகாரத்தில், நேர்மையான நமது செயல்பாடுகள், மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது என்றும் இது கட்சிக்கு கிடைத்துள்ள மிகப்பெரும் பலம் என்றும் அனைவரும் கூறினர்.
பிறகு டிசம்பரில் நடைபெற உள்ள தலைமை செயற்குழு கூட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.
தற்போது மழை காலமாக இருப்பதால், திருச்சி சிறை நிரப்பும் போராட்டத்தை தள்ளி வைத்து செயற்குழுவில் அந்த போராட்ட களம் குறித்து திட்டமிடுவது என முடிவெடுக்கப்பட்டது.
பலஸ்தீனில் இஸ்ரேலிய அரச பயங்கரவாதத்தால் ஏற்பட்டிருக்கும் பேரழிவு குறித்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
அங்கு மருத்துவமனைகள், ஆம்புலென்ஸ்கள், அகதி முகாம்கள், மக்கள் குடியிருப்புகள் திட்டமிட்டு அழிக்கப்படுவதோடு, குழந்தைகள் குறிவைத்து அழிக்கப்படுவதை  இனப்படுகொலையின் உச்சம் என்றும், ஐ.நா சபையின் தீர்மானங்களை இஸ்ரேலும், அமெரிக்கவும் நிராகரிப்பது சர்வதேச சமூகத்தின் உணர்வுகளை இழிவுப்படுத்தும் மோசமான செயல் என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் ஆதரவு குரல்கள் வலிமைப்பெற்றிருப்பதை இக்கூட்டத்தில் வரவேற்று, இதற்கு துணை நிற்கும் ஊடகங்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியலாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும்  நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும் அங்கு போரை நிறுத்தக்கோரியும், குழந்தைகள் மீதான படுகொலைகளை நிறுத்தக்கோரியும் தமிழ்நாட்டில் உள்ள ஆளுமைகளை முன்னிறுத்தி பதாகை ஏந்தி வலைதள பரப்புரைகளை மேற்கொள்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
நிறைவாக மஜக துணைப்பொதுச்செயலாளர் நாச்சிக்குளம். தாஜூதீன் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுற்றது.
இதில் தலைமை நிர்வாகிகள், மாநிலத்துணைச்செயலாளர்கள், மாநில அணிச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.