விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணாவை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைப்பது என்பது சாத்தியப்படாத ஒரு விடயம் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள தேசிய கட்சிகளுடன் இணைந்து, தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தமக்கு கிடையாது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா), எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தாம் தமிழ்த் தேசிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவதற்கு தான் தயாராகவுள்ளதாகவும் கிளிநொச்சியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சிவஞானம்,
“ கருணா கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட விரும்புவதாக தெரிவித்தாரே தவிர கூட்டமைப்பு அவரை இணைத்துக் கொள்ளுவது தொடர்பாக எந்த ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை அவரை கூட்டமைப்புடன் இணைப்பது என்பது சாத்தியப்படாத ஒரு விடயம்” என்றார்.