கெடுபிடிகள் காரணமாக வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி விழா இடம்பெறவில்லை.
பல்வேறு கெடுபிடிகள் காரணமாக வவுனியா வெடுக்குநாறி மலை ஆதி
இலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இம்முறை சிவராத்திரி விழா இடம்பெற்றிருக்கவில்லை.
நெடுங்கேணி வெடுக்குநாறிமலை, ஆதிஇலிங்கேஸ்வரர் ஆலயம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள் தொல்பொருட்திணைக்களத்திற்கு கீழ் உள்ளதாக தெரிவித்து, அந்த திணைக்களம் மற்றும் பொலிசாரால் இரு வழக்குகள் வவுனியா நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு இடம்பெற்று வருகின்றது. அதனை தொடர்ந்து ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் பல்வேறு தடைகள் ஏற்ப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் பொலிசார் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் கெடுபிடிகள் காரணமாக இம்முறை சிவராத்திரி தின விசேட பூஜைகள் எவையும் வெடுக்குநாறி மலையில் இடம்பெறவில்லை. எனினும் பொதுமக்கள் வருகைதந்து வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை ஆலய நிர்வாகத்தினரின் மேல் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு இன்றையதினம் வவுனியா நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.