கைதானவா்களுக்கு நீதி வேண்டி யாழிலிருந்து வவுனியாவுக்கு நாளை வாகனப் பேரணி

ஊடகப் பேச்சாளர் சுகாஸ் அவர்கள் வழங்கிய செவ்வி
வெடுக்குநாறிமலை ஆலயத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி கோரி நாளை காலை யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு வாகனப் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்தார்.

இது தொடா்பில் அவர் மேலும் கூறுகையில், “அனைவருக்காகவும் இன்று 8 அப்பாவி உறவுகள் வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்கக் கோரி அவர்களின் உறவுகள் நாளை காலை 10 மணியளவில் வவுனியாவில் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

இந்நிலையில், அவர்களுக்கு ஆதரவு வழங்கும் முகமாக நாளை காலை 07.30 மணிக்கு யாழ். நல்லூர் ஆலய முன்றலில் இருந்து வவுனியாவுக்கு வாகனப் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது. இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

வெடுக்குநாறிமலை ஆலயத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டவர்கள் ஒரு குற்றமும் செய்யாதவர்கள். இவர்கள் செய்த பெரிய குற்ற வெடுக்குநாறிமலைக்குப் போனதுதான். அங்கு “ஓம் நமச்சிவாய“ எனக் கூறி பூஜை செய்வதற்காகவே அவர்கள் அங்கு சென்றார்களே தவிர வேறெதற்காகவும் இல்லை.

இதனால், அவர்கள் தொல்லியல் சட்டத்தை மீறியதாக அவர்களைக் கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர். இதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்தச் சம்பவத்தை நாம் கண்டுகொள்ளவில்லை என்றால், நாளை வடக்கு – கிழக்கு எங்கும் தொல்லியல் சட்டம் எனக் கூறி அனைத்து பிரதேசங்களையும் ஆக்கிரமிக்கக்கூடும். ஆகவே, அனைவரையும் இந்த வாகனப் பேரணியில் கலந்துகொள்ள வருமாறு பகிரங்க அழைப்பு விடுக்கின்றோம்” என்று சுகாஸ் மேலும் தெரிவித்தாா்.