கைதானவா்களை விடுதலை செய்யுங்கள் – நெடுங்கேணியில் இன்று மக்கள் போராட்டம்

15 3 கைதானவா்களை விடுதலை செய்யுங்கள் - நெடுங்கேணியில் இன்று மக்கள் போராட்டம்
வவுனியாவில் வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் பொலிஸாரின் அராஜகத்திற்கு எதிராகவும் தமிழருக்கான நீதிகோரியும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று பொலிஸார் மேற்கொண்ட அத்துமீறலை அடுத்து கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும் நீதி கோரியே வவுனியாவில் இன்று பொதுமக்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்கு அருகில் ஆரம்பமான நிலையில், நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தை நோக்கி ஊர்வலமாக சென்றுள்ளது.

அதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் இந்த மண் எங்களின் சொந்த மண், பொலிஸ் அராஜகம் ஒழிக மற்றும் தமிழர் தாயகத்தில் பௌத்தமயமாக்கலை நிறுத்து போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்லஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறீதரன், வினோநோகராதலிங்கம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் போராட்டத்தில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.