கொழும்பில் நோர்வே தூதரகம் தனது நடவடிக்கைகளை நிறைவு செய்கிறது, அடுத்த கட்ட நடவடிக்கையை அறிவிப்பு

இலங்கைக்கான நோர்வே தூதரகம் 2023 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதியுடன் இலங்கையில் செயற்பாடுகளை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது.

ஒகஸ்ட் 01 முதல் இலங்கை மற்றும் மாலைத்தீவுடனான நோர்வேயின் இருதரப்பு உறவுகளுக்கு புதுடெல்லியில் உள்ள நோர்வே தூதரகம் பொறுப்பேற்கும் என தூதரகம் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் என்ற தனது முகநூல் பக்கத்தை மூடுவதாக தெரிவித்துள்ள தூதரகம், புதுடெல்லியில் உள்ள நோர்வே தூதரகத்தின் பக்கத்தைப் பின்தொடருமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்தியா, இலங்கை மற்றும் மாலைத்தீவுடனான அதன் தற்போதைய ஒத்துழைப்பு குறித்த மேலதிக புதுப்பிப்புகள் புதிய பேஸ்புக் பக்கத்தில் கிடைக்கும் என தூதரகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தனது @NorwayAmbLK எனும் ட்விட்டர் கணக்கு புதுப்பிக்கப்படமாட்டாது என இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நோர்வே தூதுவர் ட்ரைன் ஜோரன்லி எஸ்கெடல் தெரிவித்துள்ளார்.

புதுப்பிப்புகளுக்கு @norwayinindia ஐப் பின்தொடருமாறு பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.