சஜித் தலைமையில் எதிரணியின் கூட்டணி ஜனவரி 20 உதயமாகும் – மனோ, திகா, ஹக்கீம் இணைகின்றாா்கள்

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் அமையவுள்ள புதிய அரசியல் கூட்டணி 2024 ஜனவரி 20 ஆம் திகதி வெளியிடப்படும் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருவதாகவும், புரிந்துணர்வு உடன்படிக்கை தயாரிப்புகூட இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும் தெரியவருகின்றது.

கூட்டணியில் அங்கம் வகிக்க வேண்டிய தரப்புகளை தீர்மானிக்கும் அதிகாரத்தை கட்சி தலைவரான சஜித் பிரேமதாஸவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி வழங்கியுள்ளது.

அதேவேளை இனவாதிகளையும், கடும்போக்குவாதிகளையும் இணைத்துக்கொள்ள வேண்டாம் என சஜித் தரப்பில் இணைந்துள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான தற்போதைய கூட்டணியில் தமிழ் முற்போக்கு கூட்டணி அங்கம் வகிக்கின்றது. புதிய கூட்டணியிலும் அது தொடரும் என கூறப்பட்டது.