குருந்தூர் மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாக கூறப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது முல்லைத்தீவு நீதிமன்றத்திலே இன்றைய தினம் எடுத்து கொள்ளப்பட்டது. இவ்வழக்கின் பின்னர் ஊடகங்களுக்குத் தகவல் வழங்கிய சட்டத்தரணி தனஞ்சயன், சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறும் வரை குருந்தூர்மலை விவகார வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குருந்தூர்மலை பிரதேசத்திலே அமைதி வழியில் போராட்டத்தை நடாத்திய அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரை உள்ளடக்கியோருக்கு எதிராக முல்லைத்தீவு பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது இன்றையதினம் நீதிமன்றத்தில் எடுத்து கொள்ளப்பட்டது.
இது தொடா்பாக தெரிவித்த சட்டத்தரணி தனஞ்சயன், “குறித்த வழக்கின்போது, முல்லைத்தீவு பொலிஸார் தாங்கள் இது தொடர்பாக சட்டமா அதிபரிடம் மேலதிக ஆலோசனை பெற வேண்டும் எனத் தெரிவித்திருந்தனர். வழக்கில் இணைக்கப்பட்டிருந்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் உட்பட்ட ஐந்து நபர்களுக்காக முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினைச் சார்ந்த அனைத்து சட்டத்தரணிகளும் ஆஜராகியிருந்தோம்.
சட்டமா அதிபரின் ஆலோசனை பெறும் வரையில் இவ்வழக்கினை கிடப்பில் போடவேண்டும் எனவும் மேலதிகமாக இந்த வழக்கினை தொடர வேண்டும் என சந்தர்ப்பம் ஏற்பட்டால் மாத்திரம் குறித்த சந்தேக நபர்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டு மீண்டும் இந்த வழக்கானது நீதிமன்றிலே கொண்டு செல்லப்பட முடியும் எனவும் தெரிவித்திருந்தோம்.
அதனை ஏற்றுக்கொண்ட நீதவான், குறித்த வழக்கினை இன்றைய தினத்திலிருந்து கிடப்பில் போட்டுள்ளார். மீளவும் அறிவித்தல் கிடைத்தால் மாத்திரம் குறித்த சந்தேக நபர்கள் வழக்கிற்கு வருகை தர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்” என்றும் சட்டத்தரணி தனஞ்சயன் குறிப்பிட்டார்.
குறித்த வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது பாராளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர ஜூட்சன் ஆகியோர் மன்றுக்குச் சமூகமளித்திருந்தனர்.