சரத் பொன்சேகாவுக்கு விரைவில் மார்ஷல் பதவி?

பாதுகாப்புத் துறையில் உலகின் உச்ச பதவியான ‘மார்ஷல்’ பதவி முன்னாள் இராணுவத் தளபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகாவுக்கு விரைவில் வழங்கப்படவுள்ளது என்று கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய மக்கள் சக்தியின் எம். பியான சரத் பொன்சேகா அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய ஆறு நட்சத்திர ஜெனரல் அந்தஸ்து கொண்ட மார்ஷல் பதவி அவருக்கு வழங்கப்படவுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளை இறுதிப் போரில் வெற்றி கொண்ட போது 4 நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஜெனரல் பதவி வழங்கப்பட்டது. 2010 ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக போட்டியிட்ட அவர் இராணுவ குற்றங்களை இழைத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார். 2012 இல் விடுதலை செய்யப்பட்டார்.

2015 ஆட்சி மாற்றத்தின் பின்னர், அவருக்கு பீல்ட் மார்ஷல் பதவி வழங்கப்பட்டது. மார்ஷல் பதவியை உலகில் சிலரே வகித்துள்ளனர். இராணுவ ரீதியில் முக்கியத்துவம் பெற்ற நாடுகளின் தலைவர்களும் இந்தப் பதவியை வகித்தனர்.

அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஜோர்ஜ் வாஷிங்டன், ரஷ்யாவின் முன்னாள் தலைவர் ஜோசப் ஸ்டாலின், சீனாவின் முதல் தலைவர் மாவோ சேதுங்ஆகியோர் மார்ஷல் பதவி வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.