சாந்தனின் பூதவுடல் நீண்ட இழுபறிகளின் பின்னா் உறவினா்களிடம் கையளிப்பு – இன்றிரவு வடக்கு நோக்கி பயணம்

நீர்கொழும்பு வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைகள் நிறைவுபெற்றுள்ள நிலையில், சாந்தனின் பூதவுடல் இன்று மாலை நீண்ட இழுபறிகளின் பின்னா் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை காலை விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சாந்தனின் உடல் நீர்கொழுப்பு வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது.

உடற்கூற்று பரிசோதனை தொடர்பில் இழுபறிகள் காணப்பட்ட போதிலும் இன்று மாலை 5.00 மணியளவில் சகல பரிசோதனைகளும் நிறைவுபெற்று உடல் கையளிக்கப்பட்டுள்ளதாக சாந்தனின் சகோதரர் மதிசுதா தெரிவித்தார்.

சாந்தனின் பூதவுடலை யாழ்ப்பாணத்துக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இன்றிரவு தரைவழியாக பூதவுடலை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.