சா்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வோம் – சஜித் பிரேமதாஸ

image 6487327 3 சா்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வோம் - சஜித் பிரேமதாஸ
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் இணக்கப்பாடு கண்டுள்ள ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து, மக்களுக்கு சார்பானதாக திருத்தம் செய்து, தற்போதைய வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதற்கான ஐக்கிய மக்கள் சக்தி வகுத்துள்ள திட்டம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அமெரிக்க திறைசேரியின் ஆசியாவிற்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத்துக்கு விளக்கமளித்துள்ளாா்.

இலங்கையில் தற்போது விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க திறைசேரியின் ஆசியாவிற்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை நேற்றுச் சந்தித்தார். இச்சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், ஐக்கிய அமெரிக்க இராஜதந்திரிகள் சிலரும் பங்கேற்றனா்.

இந்தச் சந்திப்பின் போது, இரு தரப்பினரும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து பல்வேறு கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

தற்போதைய அரசாங்கத்தின் வரிக் கொள்கையினால் நாட்டு மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதன்போது விளக்கிக்கூறினாா்.

தாம் அதிகாரத்துக்கு வந்தால் மக்களுக்கு நிவாரணம் வழங்குவது, வரிக் கொள்கையை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது, சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போதுள்ள அரசாங்கம் இணக்கப்பாடு கண்டுள்ள ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து, மக்களுக்கு சார்பானதாக திருத்தம் செய்து, தற்போதைய வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தி வகுத்துள்ள திட்டம் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் விளக்கமளித்தார்.

தேர்தல்கள் தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்படுவதன் மூலம் மக்களின் ஜனநாயக உரிமைகள் எவ்வாறு மீறப்பட்டுள்ளன என்பது தொடர்பாகவும் சஜித் பிரேமதாஸ, அமெரிக்க திறைசேரி திணைக்களத்தின் ஆசியாவிற்கான பிரதி உதவிச் செயலாளரிடம் தெரிவித்தாா்.

இச்சந்திப்பில், ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, கபீர் ஹாசிம், மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், வி. இராதாகிருஷ்ணன், நிரோஷன் பெரேரா மற்றும் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனா்.