சிரட்டையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பருகிய இராணுவத்தினர்

19 சிரட்டையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பருகிய இராணுவத்தினர்முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு, நேற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சி விநியோகிக்கும் நிகழ்வு மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில், பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது, பொது மக்கள் மட்டுமன்றி வீதியில் பயணித்த இராணுவத்தினரும் முள்ளி வாய்க்கால் கஞ்சியை சிரட்டையில் பெற்று பருகினர். இதன்போது, வீதியில் சென்ற பலருக்கும் மாணவர்களினால் கஞ்சி பகிர்ந்தளிக்கப்பட்டது.

அதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சாள்ஸ் நிர்மலநாதனின் ஏற்பாட்டில் மன்னார் – நானாட்டான் பஸ் நிலையத்திலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதன்போது, முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர் நீத்தோருக்காக அஞ்சலிலும் செலுத்தப்பட்டது.

மழைக்கு மத்தியில் இடம்பெற்ற நிகழ்வில், மதத் தலைவர்கள், இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு நேற்று கிளிநொச்சி, உழவனூர் பகுதியில் நிகழ்வு இடம்பெற்றது. உழவனூர் இளைஞர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வின்போது, முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனையடுத்து முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பகிர்ந்தளிக்கப்பட்டது.