சிறிதரன் மாவீரர்களுக்கு கார்த்திகை மலர் வைத்து மரியாதை

0121 சிறிதரன் மாவீரர்களுக்கு கார்த்திகை மலர் வைத்து மரியாதைஇலங்கை தமிழரசுக் கட்யின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு சென்று மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

இதன்போது மாவிரர்களின் நினைவு தூபிக்கு அவர் கார்த்திகை மலர் வைத்து பூஜித்ததுடன், அஞ்சலியும் செலுத்தினார்.

இதனையடுத்து, தேர்தல் வெற்றியுடன் கிளிநொச்சி பிள்ளையார் ஆலயத்துக்கும் சென்ற அவர் மத வழிபாடுகளில் கலந்து கொண்டதுடன், ஆசியையும் பெற்றுக் கொண்டார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் 74 வருட வரலாற்றில் முதல் முறையாக தலைவரை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று இடம்பெற்றிருந்தது.

இந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

திருகோணமலையில் இடம்பெற்ற இந்த தேர்தலில் சிறிதரனுக்கு ஆதரவாக 184 வாக்குகளும், எதிர்த்து போட்டியிட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சுமந்திரனுக்கு 137 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.

இந் நிலையில் அடுத்த வாரம் இடம்பெறும் தமிழரசுக் கட்சியின் மாநாட்டின் போது, சிறிதரன் தலைவராக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்வார்.