சீரற்ற காலநிலையால் 26 போ் உயிரிழப்பு – 1,30,000 போ் பாதிப்பு

9 சீரற்ற காலநிலையால் 26 போ் உயிரிழப்பு - 1,30,000 போ் பாதிப்பு“சீரற்ற காலநிலையால் 26 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், மீள் புனரமைப்பு பணிகளை முன்னெடுக்கவும் ஜனாதிபதி நிதி ஒதுக்கியுள்ளார்” என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில் –

“நாட்டில் கடந்த தினங்களில் நிலவிய சீரற்ற காலநிலையால் இதுவரை 23 மாவட்டங்களில் உள்ள 33 ஆயிரத்து 622 குடும்பங்களை சேர்ந்த 130,021 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட திடீர் விபத்துக்களினால் 26 பேர் உயிரிழந்துள்ளமையுடன், 41 பேர் காயமடைந்துள்ளனர். மண்சரிவு மற்றும் வெள்ள அபாயத்தை கருத்திற் கொண்டு 116 தற்காலிக பாதுகாப்பு மத்திய முகாம்களில் 2,369 குடும்பங்களைச் சேர்ந்த 9248 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு தேவையான வசதிகள் பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. அனர்த்தங்களில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு முப்படையினர் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர். இயற்கை அனர்த்தத்தை முகாமைத்துவம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று எதிர்க் கட்சிகள் குற்றஞ்சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஏனெனில் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை தொடர்பில் கடந்த வாரம் திங்கட்கிழமை பாதுகாப்பு அமைச்சின் ஊடாக பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. அனர்த்தங்கள் தொடர்பில் அறியத் தருமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் 117 என்ற விசேட தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பிரதேச செயலக பிரிவுகள் முன்வைக்கும் யோசனைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

எதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பது தற்போது வழமையாகி விட்டது. மாவட்டங்களில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அசாதாரண சூழ்நிலையின் போது மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு போதுமான நிவாரணம் வழங்க ஜனாதிபதி நிதி ஒதுக்கியுள்ளார்”