செங்கடலுக்கு இரகசியமாக அனுப்பப்பட்ட இலங்கைக் கப்பல் திரும்புகிறது

SL navy செங்கடலுக்கு இரகசியமாக அனுப்பப்பட்ட இலங்கைக் கப்பல் திரும்புகிறதுசெங்கடலின் பாதுகாப்புக்கான கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக மிகவும் இரகசியமாக அனுப்பப்பட்ட இலங்கை கடற்படை கப்பல் தனது கூட்டு நடவடிக்கையை பூர்த்திசெய்து நாடு திரும்புகின்றது என்று தகவல் வெளியாகியுள்ளது.

பப் எல் மன்டெப் நீரிணைக்கு இலங்கை கடற்படை கப்பல் அனுப்பப்பட்டதை கடற்படை பேச்சாளர் கயன் விக்கிரமசூர்ய உறுதி செய்தார். எந்த பிரச்னைகளையும் எதிர்கொள்ளாமல் இலங்கை கடற்படை கப்பல் தனது கண்காணிப்பு நடவடிக்கையை பூர்த்த செய்துவிட்டு நாடு திரும்புகிறது என்று அவர் கூறினார்.

அத்துடன், விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் பின்னர் இலங்கை கடற்படை முன்னெடுத்த ஆபத்தான இந்த நடவடிக்கையின் இரகசிய தன்மை காரணமாக கடற்படை மேலதிக தகவல்களை வெளியிடவில்லை என்று தென்னிலங்கையின் பிரபல ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.

மீண்டும் எப்போது இலங்கை கடற்படை தனது கப்பலை அனுப்பும் என்பது குறித்தும் இலங்கை கடற்படை எதனையும் தெரிவிக்கவில்லை.

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக – பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் போக்குவரத்தின் மிக முக்கியமான செங்கடலில் பயணிக்கும் கப்பல்களை தாக்கி வருகிறார்கள். இதற்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் போர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

முன்னதாக இந்தப் போர் நடவடிக்கையில் இலங்கையும் பங்கெடுக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். ஆனால், அவ்வாறான நடவடிக்கையில் கடற்படை ஈடுபடாது என்றவாறான தகவல்கள் பின்னர் வெளியாகியிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.