ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டிலேயே ஐ.தே.க. இயங்குகின்றது – விஜித ஹேரத்

ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டிலேயே ஐக்கிய தேசியக் கட்சி இயங்குகின்றது என்றும், தங்களின் தேர்தல் செலவுகளுக்காகவே ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் மேலும் 875 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற குறைநிரப்பு மதிப்பீட்டு தீர்மானம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது விஜித ஹேரத் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதிக்கான ஒதுக்கீட்டு சட்ட மறுசீரமைப்பு முன்வைக்கப்பட்டுள்ளது. அதில் கிராமங்களின் அபிவிருத்தி மற்றும் வீதிகளின் புனரமைப்புக்காக இந்த நிதி ஒதுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அப்படியென்றால் அதனை ஜனாதிபதியின் கீழ் மாற்ற வேண்டிய அவசியமில்லையே. வீதி அபிவிருத்தி மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழேயே அதனை கொண்டுவந்திருக்க வேண்டும். அதனை செய்யவில்லையே. ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தேர்தலை இலக்காகக் கொண்டே செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியானது ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டிலேயே இயங்குகின்றது. கட்சியின் உயர் பதவிகளில் இருப்பவர்களான ருவான் விஜேவர்தன, அகிலவிராஜ், ரங்கே பண்டார மற்றும் சாகல ரட்நாயக்க ஆகியோரை ஜனாதிபதியின் இணைப்பு செயலாளர்களாக நியமித்து அமைச்சுக்களில் உள்ள நல்ல வாகனங்கள் இந்த செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அனுராதபுரத்தில் முன்னாள் எம்.பியான ஹரீசன் விவசாய அமைச்சுக்கு சென்று நல்ல வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளார்.

இப்போது 875 கோடி ரூபா அவர்களின் தேவைகளுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது. மதிப்பீடு செய்து ஒதுக்குவதென்றால் வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கும் போதே ஒதுக்கியிருக்க வேண்டும். தேர்தலுக்காக அவசரமாக நிதியை ஒதுக்கவே நடவடிக்கை எடுத்துள்ளனர். தேர்தலுக்கு மூன்றரை மாதங்களே உள்ள நிலையில் அதற்கான செலவுகளுக்காகவே இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேவேளை மக்கள் வரிச் சுமையில் இருக்கும் நேரத்தில் பதவி விலகிச் சென்ற முன்னாள் ஜனாதிபதிக்கும் நிதி ஒதுக்கப்படுகின்றது. அவருக்கு 97 ஆயிரத்து 500 ரூபா ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.

செயலாளர் கொடுப்பனவாக ஒரு இலட்சம் ரூபா வழங்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதிகளின் வாகன எரிபொருள் கொடுப்பனவாக 7 இலட்சம் ரூபா வழங்கப்படுகின்றது. அத்துடன் தெரிவு செய்யப்பட்ட எம்.பிக்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்படுகின்றது. இது இலஞ்சமே. இது தவறானது. அதனை பெற்றாலும் குற்றமே. தேர்தலில் தமக்கு ஏற்றால் போன்று செலவுகளை செய்வதற்காகவே 875 கோடி ரூபா ஒதுக்கப்படுகின்றது. இதற்கு நாங்கள் எமது எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றோம் என்றார்.