ஜனாதிபதித் தேர்தலுக்கான வர்த்தமானி ஜூலை மாதத்தில் வெளியிடப்படும் – அமைச்சர் மஹிந்த அமரவீர

ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி எதிர்வரும் ஜூலை மாதம் வெளியிடப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எனவே, விவசாயம் மற்றும் பெருந்தோட்ட அமைச்சின் கீழ் இந்த வருடத்தில் திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்துமாறும்
அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வர்த்தமானி வெளியிடப்பட்டதன் பின்னர் எந்தவொரு அபிவிருத்திப் பணிகளையும் நடைமுறைப்படுத்த முடியாது எனத் தெரிவித்த அமைச்சர், ஜூலை மாதத்தின் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் முடிவடையும் வரையில் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்தார்.

அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டங்களில் இவ்வருட ஆரம்பம் முதல் இது தொடர்பாக கூறப்பட்டு வந்த போதிலும், அநேகமான அபிவிருத்தித் திட்டங்களை நிறைவேற்றுவதில் திருப்தியடைய முடியாத நிலை காணப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு தெரிவித்தாா்.