ஜனாதிபதித் தேர்தலை பிற்போடவே முடியாது – மகிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டுகிறாா்

ஜனாதிபதித் தேர்தலை செப்ரெம்பர் மாதம் 20ஆம் திகதிக்கும் ஒக்ரோபர் மாதம் 16ஆம் திகதிக்கும் இடை யில் கட்டாயமாக நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் மகிந்த தேசப்பிரிய இவ்வாறு தெரிவித்தார்.

செப்ரெம்பர் 20ஆம் திகதியிலிருந்து ஒக்ரோபர் 17ஆம் திகதிக்குள் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும். இந்த தேர்தலை பிற்போட முடியும் என எவரேனும் கூறினால், அவர்களின் மூளையை பரிசோதனைக்குட்படுத்தி பார்க்கவேண்டும். எக்காரணத்தினாலும் தேர்தலைப் பிற்போடுவது என்பது தவறு.

வானமே இடிந்து தலைமேல் விழுந்தாலும் ஜனாதிபதித் தேர்தலை மட்டும் பிற்போட முடியாது. தேர்தலுக்கான முதற்கட்ட வேலைத்திட்டங்கள் தற்போது தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது. அதுகுறித்து நாம் ஆராயப்போவதில்லை. அதற்கான உரிமையும் எமக்கு இல்லை.

அத்துடன், தேர்தல்கள் ஆணைக்குழு அதன் கடமைகளை, உண்மையுடனும், நேர்மையுடனும் செய்யும் என கண்காணிப்பு அமைப்பு என்ற வகையில் நாம் நம்புகின்றோம். தற்போது மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன. இதனை சில கட்சிகளை தமக்கு சாதகமாக பயன்படுத்தி வாக்கு வேட்டையில் ஈடுபடுவதைத் தடுக்கவேண்டும். தேர்தல் காலத்தில் இவ்வாறான அபிவிருத்திகள் கட்சி சார்ந்து முன்னெடுக்கப்படுவதை கண்காணிப்பு அமைப்புகள் கவனத்தில் எடுக்கவேண்டும்” என்றார்.