ஜனாதிபதி தேர்தலில் மொட்டு களம் இறங்குமா? குழப்பமான பதிலை சொன்ன மகிந்த

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர். பொதுஜன பெரமுன சார்பில் வேட்பாளர் போட்டியிடலாம் அல்லது போட்டியிடாமல் இருக்கலாம் என பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஒரு நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“அரசியல் ரீதியில் நாங்கள் குறிப்பிடும் கருத்துக்கள் திரிபுப்படுத்தப்படுகின்றன.எமது அரசாங்கம் வரி குறைத்ததால் நெருக்கடிகள் தோற்றம் பெற்றது என குறிப்பிடப்படுகிறது.

தற்போது வரி அதிகரிப்பினால் சமூக கட்டமைப்பில் நெருக்கடிகள் தோற்றம் பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம்.

அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் நிலையான இலக்கை அடைய முடியாது என்பதை தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளோம்.

கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு நாங்கள் தயாராகவே உள்ளோம். பிரிந்து சென்றவர்கள் எம்முடன் தாராளமாக ஒன்றிணையலாம். அரசியலில் நான் யாரையும் எதிரியாக பார்க்கவில்லை” என்று அவர் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க தேசிய தலைவராக ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படுவவதாக குறிப்பிடப்படுகிறது என்று கேட்கப்பட்டபேது, “அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்” என்று மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

உங்களின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? என்று அவரிடம் கேட்டபோது, “நாங்கள் இதுவரை ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிக்கவில்லை. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் களமிறங்கலாம், அல்லது களமிறங்காமல் இருக்கலாம்” என்று மகிந்த பதிலளித்தார்.