ஜனாதிபதி பதவிக்காலம் குறித்த சா்ச்சையை தீா்க்க புதிய சட்டம் – ஐ.தே.க. பொதுச் செயலாளா்

19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான குழப்பநிலை காணப்படுவதாகவும் அதனை ஆராயும் நோக்கில் அமைச்சரவையில் யோசனை ஒன்றை ஜனாதிபதி முன்வைத்துள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வருவதற்கும் எதிர்பார்த்துள்ளதாகவும் அது கூறியுள்ளது.

மதவாச்சியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

“19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பாக ஒரு இடத்தில் 5 ஆண்டுகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் மற்றுமொரு இடத்தில் ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தற்போது குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அமைச்சரவையில் இது தொடர்பான யோசனை ஒன்றை ஜனாதிபதி முன்வைத்துள்ளார். விரைவில் இந்த விடயம் தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வருவதற்கும் எதிர்பார்த்துள்ளோம்” என்றார்.