ஜனாதிபதி ரணிலை சந்தித்து சரத் பொன்சேகா ரகசியப் பேச்சு – கட்சி தாவலுக்கு தயாராவதாக தகவல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு நடைபெற்றுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் சுமார் 20 நிமிடங்கள் வரை நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது சமகால விவகாரங்கள் பற்றி பேசப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியினர் சபையில் இருந்து நேற்று வெளிநடப்பு செய்தனர். எனினும், சரத் பொன்சேகா உள்ளிட்ட அக்கட்சியின் 6 எம்.பிக்கள் சபையில் இருந்து
ஜனாதிபதியின் உரையைச் செவிமடுத்தனர்.

அத்துடன், பொன்சேகாவுக்கும், சஜித்துக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும், ஐக்கிய மக்கள் சக்தியை விட்டு விலகப்போவதில்லை என்று பொன்சேகா அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எப்படியிருந்தாலும் இறுதி நேரத்தில் சரத் பொன்சேகா கட்சி மாறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட முடியாது என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.