ஜெனிவா கூட்டத் தொடரில் உத்தியோகபூர்வ குழு எதுவும் இலங்கையிலிருந்து செல்லாது

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை சார்பில் உத்தியோகபூர்வகுழு எதுவும் ஜெனிவா செல்லாது. கூட்டத் தொடர் விடயங்கள் அனைத்தையும் ஐ. நா. வதிவிடப் பிரதிநிதியே கையாள்வார் என்று அரசாங்கம் கூறியுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் 55ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகிறது. இந்தக் கூட்டத்தொடர் எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

இதில், பங்கேற்பதற்காக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தலைமையிலோ அல்லது வேறெந்த உத்தியோகபூர்வமான அமைச்சர்கள் தலைமையிலான குழுவினரோ இம்முறை செல்ல மாட்டார்கள் என்று அரசாங்கத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பிலான முன்னேற்றகரமான விடயங்கள் தொடர்பில் ஜெனிவாவில் உள்ள வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலகவே விடயங்களை கையாளவுள்ளார்.

குறிப்பாக, இலங்கையின் நிலைமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் வாய்மூல அவதானிப்பு அறிக்கை மார்ச் 4ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதனையடுத்து, ஜெனிவாவுக்கான இலங்கை வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக அந்த வாய்மொழி அறிக்கையில் குறிப்பிட்ட விடயங்கள் சம்பந்தமாக பதிலளிப்பை வழங்குவார்.

அத்துடன், பல்வேறுபட்ட பக்கநிகழ்வுகளிலும் அவர் பங்கேற்று கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார். இதேநேரம், அவருக்கான சகல ஒத்துழைப்புகளையும் வெளிவிவகார அமைச்சு வழங்கும் என்றும் கூறப்பட்டது.