தகவல் வழங்க மறுத்த வழக்கில் இராணுவம் ஆஜராக உத்தரவு

இறுதி யுத்த காலத்தில் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான தகவல்களை வழங்க மறுத்தமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான பரிசீலனையில் முன்னிலையாக வேண்டுமென இராணுவத்துக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான பல்வேறு தகவல்களை, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஊடகவியலாளர் பா. நிரோஸ் 2019 ஆம் ஆண்டு கோரியிருந்தார். எனினும், “இலங்கை இராணுவத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் சரணடையவில்லை. இலங்கை அரசாங்கத்திடமே புலிகள் சரணடைந்தார்கள்” என பதில் வழங்கி ஊடகவியலாளர் கோரியிருந்த தகவல்களை வழங்க இராணுவம் மறுத்திருந்தது.

இதற்கு எதிராக தகவலறியும் ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீடு 3 வருடங்க ளுக்குப் பின்னர் 2022ஆம் ஆண்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. இந்த விசாரணைகளில் மூத்த சட்டத்தரணி கே. எஸ். ரத்னவேல், சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம் ஆகியோர் முன்னிலையாகினர். ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்த்தன மற்றும் பஷான் ஜயசிங்க ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

நீண்ட விசாரணைகளின் பின்னர் சரணடைந்த புலிகள் தொடர்பான தகவல்களை வழங்க மறுத்த இராணுவத்தின் தீர்மானத்துக்கு அனுதியளிக்கும் வகையில், 2023ஆம் ஆண்டு நவம்பர் 08ஆம் திகதி தகவலறியும் ஆணைக்குழு தீர்ப்பு வழங்கியிருந்தது. ஆணைக்குழு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஊடகவியலாளர் சார்பில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் டி. என். சமரகோன் முன்னிலையில் இந்த மனு நேற்றுமுன்தினம் பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மனுவை பரிசீலனை செய்திருந்த நீதியரசர் டி. என். சமரகோன் மனுதாரர் சார்பில் ஆரம்பக்கட்ட பரிசீலனைகள் அவசியமில்லை எனவும் எதிர்வரும் மார்ச் 28ஆம் திகதி இலங்கை இராணுவம் நீதிமன்றில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டார்.