தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இலங்கை நாடாளுமன்றத்திற்குள் போராட்டம்

மட்டக்களப்பில் தமிழ் பண்ணையாளர்களின் நிலத்தை இலங்கை அரசின் அனுசரணையுடன் பெரும்பான்மை மக்கள் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையில் இலங்கை நாடாளுமன்றத்தினுள் இன்று (6) எதிர்ப்பு போரட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு மயிலத்தமடு மேய்ச்சல் தரை பண்ணையாளர்களுக்கு நீதி வழங்கக் கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களால் முன்னெடுத்த முன்னெடுத்த போராட்டத்தால் வெள்ளிக்கிழமை சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பியான சாணக்கியன் இராசமாணிக்கம், கலையரசன் மற்றும் வன்னி மாவட்ட எம்.பியான விநோரோதராகலிங்கம் மற்றும் யாழ். மாவட்ட எம்.பியான எஸ்.சிறீதரன் ஆகியோர் இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் சபையில் அமைதியின்மை உருவானது.

வெள்ளிக்கிழமை முற்பகல் 9.30க்கு பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் கூடியதை தொடர்ந்து சபையில் விசேட கூற்றை முன்வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பியான இராசமாணிக்கம் சாணக்கியன், மயிலத்தமடு மாதவனைன பகுதியில் பண்ணையாளர்கள் முன்னெடுக்கும் போராட்டம் தொடர்பில் கருத்துக்களை தெரிவித்து ”எமது நிலம் எமக்கு வேண்டும்”, ”எமது வளம் எமக்கு வேண்டும்”, மகாவலி ”அதிகாரசபை கெடுபிடிகளை நிறுத்து” என்று கோசங்களை எழுப்பியவாறு சபைக்கு நடுவே சென்றார்.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய எம்.பிக்களும் அவ்விடத்திற்கு வந்ததுடன் கைகளில் ‘மயிலத்தமடு மக்களுக்கு வேண்டும்’, ‘மகாவலி ஆக்கிரமிப்பை நிறுத்து’ என்று எழுதப்படட்ட பதாகைகளை ஏந்தியவாறு சபாபீடத்திற்கு முன்னால் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய  பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களை சபையின் தினப் பணிகளுக்கு இடமளிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

எனினும் அவர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சபை முதல்வரான அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் சபையில் இல்லை. அது தொடர்பில் அமைச்சருடன் கலந்துரையாடலாம் என்று கூறினார். இவ்வேளையில் சபை முதல்வருடன் சாணக்கியன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இவ்வேளையில் ஆளும் கட்சி உறுப்பினர் பிரேமநாத் சீ தொலவத்த, சாணக்கியனை நோக்கி கடுமையாக பேசாமல் போய் அமருங்கள் என்று கூச்சலிட்டார். அவரை நோக்கி பதிலளித்த சாணக்கியன். நாங்கள் எங்கள் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் போராடுகின்றோம். தேவையில்லாத விடயத்தில் நீங்கள் தலையிடாது உங்களின் வேலைகளை பாருங்கள் என்று கூறினார். இதன்போது சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.

இதேவேளை இராஜாங்க அமைச்சரான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) சபையில் இருந்ததுடன், அவர் நடப்பவற்றை நின்றபடி பார்த்துக்கொண்டிருந்தார்.

அத்துடன் தமிழ் முற்போக்குக் கூட்டணி எம்.பியான வீ.இராதகிருஷ்ணனும் ஆர்ப்பாட்டம் நடத்தும் இடதத்திற்கு சென்று சிறிது நேரம் அவர்களுடன் நின்றுவிட்டு பின்னர் தனது ஆசத்திற்கு சென்று அமர்ந்துகொண்டார்.

தொடர்ந்தும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சபையின் தினப் பணிகளுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்றும், ஆசனங்களில் சென்று அமருமாறும் சபைக்கு தலைமை தாங்கிய பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் அடிக்கடி வலியுறுத்திய நிலையில், அவர்கள் பின்னர் ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு தமது ஆசனங்களில் சென்று அமர்ந்துகொண்டனர்.

இந்த போராட்டம் ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் பிரச்சனையை உள்ளடக்கியதாக இருந்தபோதும் இதில் பல தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கெடுக்கவில்லை என்பது தமிழ் மக்களின் பலவீனத்தையும், உள்ளக முரண்பாடுகளையும் காண்பிப்பதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.