தமிழ்ப் பொது வேட்பாளா் விடயத்தில் வெளிநாட்டு அழுத்தம் எதுவும் இல்லை – ரெலோ ஊடகப் பேச்சாளா் சுரேந்திரன்

தமிழ் பொது வேட்பாளர் நிறுத்துவது தொடர்பில் இந்தியா மற்றும் மேற்கத்தேய வல்லரசுகளின் அழுத்தம் எதுவும் கிடையாது என ரெலொ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார். 

ரெலோ பேச்சாளா் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து சந்திப்புகளை நடத்தி வருகின்றன. தமிழீழ விடுதலை இயக்கத்தின தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான எமது கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் நிறுத்துவது தொடர்பில் தனது பூரண ஆதரவை ஏற்கனவே வழங்கியுள்ளது” என்று தெரிவித்தாா்.

“பொது வேட்பாளர் தொடர்பான கலந்துரையாடல்கள் வட மாகாணத்தில் பல்வேறு இடங்களில் இடம் பெற்று வரும் நிலையில் அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்தில் சிவில் அமைப்புகளை ஒன்றிணைத்து கலந்துரையாடல் இடம் பெற்றது. இக்கலந்துரையாடலில் 40 க்கும் மேற்பட்ட சிவில் அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்து பிரதிநிதிகள் கலந்து கொண்டமை தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது” என்றும் ரெலோ பேச்சாளா் சுரேந்திரன் தெரிவித்தாா்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் நிறுத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் நிலையில் இந்தியா மற்றும் மேற்கத்தேய வல்லரசுகளின் அழுத்தங்கள் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் பிரயோகிக்கப்படவில்லை. இந்த நாடுகளே பின்னனியில் இருப்பதாக பொய் பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது காலத்தின் தேவையாக உள்ள நிலையில் தமிழ் மக்களோடு பயணிக்கின்ற அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான பேச்சு வார்த்தைகள் இடம் பெற்று வருகின்றது” என்றும் ரெலோவின் ஊடகப் பேச்சாளா் சுரேந்திரன் தெரிவித்தாா்.