தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தியும் காணாமல்போனவர்களின் பிரச்சினைக்கு தீர்வினை கோரியும் மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு காந்திபூங்காவில் இந்த போராட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
நாளை சர்வதேச மகளிர் தினம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெண்கள் அமைப்பு,காணாமல்போனோர் அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகள் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
காந்திபூங்காவில் பேரணி ஆரம்பமாகி காந்திபூங்கா முன்பக்கவுள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபிக்கு அருகில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலைசெய்,மீண்டும்மீண்டும் விடுதலைக்கான போராட்டமா,அரசே அரசியல் கைதிகளின் குடும்பங்களின் கண்ணீரை நிறுத்து,அரசே சர்வதேசமே பாதிக்கப்பட்ட பெண்களின் அவலக்குரல் கேட்கவில்லையா?,ஜனநாயக நாட்டில் மனித உரிமைகளை மீறாதே,பல ஆண்டுகள் எங்கள் உறவுகள தடுத்துவைத்திருப்பதனால் நீதிக்கு அழைக்கின்றோம், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பதில் கூறுவது யார் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
இந்த போராட்டத்தில் பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள், அருட்தந்தையர்கள்,அரசியல் கைதிகளின் குடும்ப உறுப்பினர்கள் ,காணாமல்போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது நுண்கடனால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தடுக்க கோரியும் காணாமல்போனவர்களின் பிரச்சினைக்கான தீர்வினை வழங்குமாறும் பெண்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைக்கான தீர்வினை வழங்குமாறும் வலியுறுத்தப்பட்டது.
அத்துடன் காணமல்போனவர்கள் பிரச்சினையை மறக்குமாறு சிறிலங்கா அரசுத்தலைவர் கோத்தபாய கோரியதற்கு எதிரான கருத்துகளும் இதன்போது முன்வைக்கப்பட்டன.