தம்பலகாமம் பிரதேச பயனாளிகளுக்கான காணிகள் வழங்கப்பட்டன

தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட பகுதியில் காணிக்கச்சேரி நடாத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இன்று (11) பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் கலந்து கொண்டு காணி உறுதிப் பத்திரங்களை வழங்கி வைத்தார்.
இதில் 66  காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன. நீண்ட காலமாக குடியிருப்புக் காணிகளுக்கான காணி அனுமதிப் பத்திரம் இன்றி வாழ்ந்து மக்கள் தற்போது காணிக்கான அனுமதிப் பத்திரங்களை பெற்றுள்ளனர்.
இது தொடர்பில் மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவிக்கையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மூலமாக நல்ல பல திட்டங்களை நாட்டில் அமுல்படுத்தியும் மக்களின் நலனுக்காகவும் செயற்பட்டு வருகின்றார் மேலும் இது போன்ற பல திட்டங்களை கிழக்கில் செயற்படுத்தி மக்கள் பயன்பெறும் வகையில் செயற்படுத்துவோம் என்றார்.
 குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான கபில நுவன் அதுகோரள ,தம்பலகாமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் உட்பட காணிக் கிளை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.