தியாக தீபம் திலீபன் பவனி மீது தாக்குதல் – பிரித்தானியாவில் போராட்டம்

நேற்று (20.09.2023) பிரித்தானியாவில் வெளி விவகார அமைச்சுச் செயலகத்திற்கு முன்பாகச் சிங்கள இனவழிப்பு அரசின் கொடும் செயலைக் கண்டித்தும் அதனைப் பிரித்தானிய அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கிலும் பிரித்தானியத் தமிழர்களால் போராட்டம் நடாத்தப்பட்டது.

மிகக் குறுகிய கால அழைப்பானது தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் விடுக்கப்பட்டு இருந்தது.

கொட்டும்  மழையில் போராட்டம் நிலைகுலையுமோ என்று இருந்த வேளை எமது மக்கள் கோபக் கனல் பொங்க அணிதிரண்டு நின்ற போராட்டக் களமானது, தமிழ்த் தேசிய உணர்வை எந்த சக்திகளாலும் அடக்கமுடியாது என்பதை மீண்டும் எடுத்தியம்பியது.

இன்றைய போராட்டமானது பிரித்தானிய அரசிற்கும் உலகிற்கும் தமிழ் மக்களுக்கான அரசியற் தீர்வில், தமிழ் மக்கள் என்றும் உறுதியாகப் பயணிப்பார்கள் என்ற செய்தியை அழுத்தமாகச் சொல்லியுள்ளது.

இன்றைய போராட்டத்தில் தமிழ் இளையோர் அமைப்பினர், மக்களவை அமைப்பினர் ஆகியோர் ஆங்கில உரைகளை வழங்கியிருந்தார்கள்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற முழக்கத்தோடு போராட்டம் நிறைவு பெற்றது.