சிறிலங்கா அரசுத் தலைவர் தேர்தலில் தான் போட்டியிட தீர்மானித்தமையினால் உயிரச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தனக்கு முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு பத்திரங்களை நேற்று தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ஜனாதிபதி தேர்தலில் தெற்கில் உள்ள அடிப்படை பிரச்சினைகள் மாத்திரமே கருத்திற் கொள்ளப்படுகின்றன. வடக்கு , கிழக்கு மற்றும் மலையகம் வாழ் தமிழ் மக்கள்கள் தொடர்ந்து புநக்கணிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலைi முழுமையாக மாற்றமடைய வேண்டும்.
தமிழருக்கு அரசியல் ரீதியில் முழுமையான தீர்வு கிடைக்க வேண்டும் என்று ஆரம்ப காலத்தில் இருந்து அரசியல் ரீதியில் பல அழுத்தங்களை பிரயோகித்துள்ளேன். அதில் ஒன்றாகவே ஜனாதிபதி தேர்தலின் போட்டியிடும் தீர்மானம் காணப்படுகின்றது.
டெலோ அமைப்பின் அடிப்படை கொள்கைகளுக்கு ஒருபோதும் முரணாக செயற்படவில்லை. ஜனாதிபதி தேர்தலில் சுயாதீனமான போட்டியிடுவது எவ்வித தவறும் கிடையாது. இத்தீர்மானத்திற்கு எதிராக கட்சி ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுக்குமாயின் அதனை எதிர்க் கொள்ள தயார்.
ஜனாதிபதி தேர்தலில் சுயமாக போட்டியிட தீர்மானித்ததை தொடர்ந்து இரண்டு பிரதான கட்சிகளிடம் இருந்து நேற்று (07) வேட்புமனு தாக்கல் செய்யும் வரை உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளின் பின்னணியில் உள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.