“சரத் பொன்சேக்காவின் சேவை இராணுவத் தளபதியாகவோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ முடிந்துவிடப் போவதில்லை. அவர் நாட்டுக்கு சேவையாற்றுவதற்கு இன்னும் வாய்ப்புக்கள் உள்ளன. யுத்த களத்தில் மாத்திரமின்றி அரசியல் களத்திலும் வரலாற்று வெற்றியை அவர் பதிவு செய்வார்” என்று தான் நம்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவின் ‘இராணுவத்தளபதி நாட்டுக்கு வழங்கிய வாக்குறுதி’ நூல் வெளியீட்டு விழா நேற்று மாலை கொழும்பு, தாமரை தடாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தாா்.
”பீல்ட் மார்ஷல் பொன்சேக்கா வழங்கிய வாக்குறுதிக்கமைய இராணுவத்தளபதியாக பொறுப்பேற்று 3 தசாப்தகால யுத்ததத்தை நிறைவு செய்தார். அதன் காரணமாகவே அவர் பீல்ட் மார்ஷலாக தரமுயர்த்தப்பட்டார். இலங்கையில் பீல்ட் மார்ஷலாக செயற்பட்ட ஒரேயொரு இராணுவத் தளபதி அவர் மாத்திரமே” என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டாா்.
தொடா்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, “யுத்தம் நிறைவடைந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய தேவை காணப்பட்டது. அதற்காக அங்கு இராணுவத்தின் ஒரு முழுமையான படையணி கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று கோரப்பட்டது. ஆனால் நான் சரத் பொன்சேக்காவையே நியமித்தேன். காரணம் பொன்சேக்கா என்ற ஒரு நபர் ஒரு படையணிக்கு சமமானவர்” என்று தெரிவித்தாா்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது உரையில், “யுத்த களத்தைப் போன்று அரசியலிலும் பல்வேறு பல்வேறு போராட்டங்களை எதிர்கொண்டுள்ளார். சவால்களையும் சந்தித்துள்ளார். அவற்றில் வெற்றியும் பெற்றுள்ளார். அதே போன்று எதிர்காலத்திலும் அவர் நிச்சயம் வெற்றியைப் பதவி செய்வார். எனவே அவரது சேவை இராணுவத் தளபதியாவோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ நின்று விடப் போவதில்லை. நாட்டுக்கு சேவை செய்வதற்காக இன்னும் வாய்ப்புக்கள் உள்ளன என்று நான் நம்புகின்றேன்” என்றும் தெரிவித்தாா்.