மன்னார் மாவட்டத்தில் பரவலாக காணப்படும் கருவேல முள் மரங்கள் பறவைகள் விலங்குகள் மனிதர்கள் என எவருக்கும் பயன்படாத ஒன்றாக இருக்கின்றது எனத் தெரிவித்த மன்னார் மாவட்ட மாகாண பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அப்துல் சுக்கூர், இந்த மரங்களை அழிப்பதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மன்னார் மாவட்டத்தில் ஆக்கிரமிப்பு களையாகவும் விவசாய வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் பயன் தராமல் காணப்படும் கருவேல மரங்களை அழித்து தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்து இருக்கின்றார்கள். ஆனால் வனவள திணைக்களம் கருவேல முள் மரங்களை சொந்த தேவைக்கு வெட்டினால் கூட வழக்கு தாக்கல் செய்கின்றது.
ஒரு சந்தர்ப்பத்தில் ஆக்கிரமிப்பு கலையாக பல பயிர்கள், மன்னார் மாவட்டத்தில் இருந்து தற்பொழுது அவையாவும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் இந்த கருவேல மரங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது மிகக் கடினமான ஒன்றாக இருக்கின்றது.
தற்போதைய மன்னார் மாவட்ட சூழ்நிலையில், இந்த கருவேல மரங்களின் மூலம் விவசாயம் அல்லது கைத்தொழில்கள் செய்வதற்கு என்று எந்தவித நன்மைகளும் இல்லை. இந்த கருவேல மரங்களில் உற்பத்தியாகும் விதைகள் நிலத்திலே விழுந்து 7 வருடம் வரை விதைகள் திரும்பத் திரும்ப முளைக்க கூடியது.
அதுமட்டுமல்ல நிலத்தில் உள்ள வளங்களை உறிஞ்சி எடுத்து வளர்வதோடு எந்தவிதமான வறட்சி நிலையிலும் இவைகள் உயிர் வாழும்.
இந்த கருவேல மரங்களை அழித்து ஒழிப்பதற்கு ஒரு குறிப்பிட்டவர்கள் மட்டும் போதாது, எங்கெல்லாம் இந்த மரங்கள் இடைஞ்சலாக இருக்கின்றதோ அந்த பகுதியில் உள்ள அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.